(இராஜதுரை ஹஷான்)
கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும், நோய்த் தொற்று தீவிரமடைந்தால் ஒரு தடவையில் 1000 இற்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொவிட்-19, புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் மற்றும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் அச்சூழ்நிலையினை கையாளும் விதம் தொடர்பான கலந்துரையாடல் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்படுமாயின் சுகாதார தன்மையான முகக்கவசம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான பொருட்களின் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.
நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு பத்திரங்களை அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு பிரதமர் விசேட ஆலோசனை வழங்கினார்.
கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தினால் உற்பத்தி மூலப்பொருட்கள் இறக்குமதியில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆடை உற்பத்தி, மருந்து வகை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இச்சந்திப்பில் அமைச்சர்களாக விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, பிரதமர் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment