ஜேர்மனியில் பள்ளிவாசல்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வலதுசாரி குழுவொன்றை சேர்ந்தவர்களை கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நோக்கங்களை கொண்ட 12 பேரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகவும், இக்குழுவை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிர வலதுசாரி அமைப்பொன்றை உருவாக்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் அவர்களிற்கு நிதி உதவிகள் உட்பட ஏனைய உதவிகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறி இவர்கள் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பின்லாந்தில் உள்ள அமைப்பொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களின் தலைவரான 53 வயது நபர் கடந்த வாரம் ஏனைய உறுப்பினர்களை சந்தித்து ஜேர்மனியில் பத்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை தீட்டியுள்ளார்.
நியுசிலாந்தில் கடந்த வருடம் இடம்பெற்றது போன்ற படுகொலைகளை புரிவதற்கு இவர்கள் திட்டமிட்டுள்ளனர். தங்களின் நடவடிக்கையால் வன்முறைகள் உள்நாட்டு யுத்தம் உருவாகும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
எனினும் இந்த குழுவிற்குள் ஊருடுவிய நபர் ஒருவர் அதிகாரிகளிற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் வலதுசாரிகளிற்கான ஆதரவு அதிகரித்துள்ள நிலையிலேயே பள்ளிவாசல்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களிற்கான திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment