வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு இம்மாதத்தில் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்தனை திறந்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக வன்னி மக்களிற்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க இருக்கின்றது.
இவ்விடயம் சென்ற அரசில் இருக்கின்ற அமைச்சர்களாலும் தொடர்ச்சியான சந்திப்புக்களாலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக வர்த்தகமானியில் அறிவிக்க வேண்டிய விடயம் மட்டுமே உள்ளது.
அரசாங்கங்கள் மாறும் போது ஆட்சி அதிகாரம் மாறும் போது இத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இவ்வாட்சியிலும் இது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் ஏன் பல்கலைக்கழகம் எமது மாவட்டத்திற்கு வர வேண்டும் என்பது தொடர்பாக தற்போதைய அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
அதன்படி இம்மாதத்திலேயே வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment