(ஆர்.விதுஷா)
காணிகளை பதிவு செய்வதற்காக கையாளப்படும் கைவினை முறைமையை கணனி மயப்படுத்தி மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதன் ஊடாக காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளின் போது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை குறைத்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் எனவும், நேர விரயத்தை தவிர்க்க கூடியதாகவிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பதிவாளர் காரியாலயங்களின் நடைமுறைகளை கணனிமயமாக்கும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இதற்கான ஒத்துழைப்பை ஐ.சி.ரி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளோம். இதனால் மக்களுக்கு பல சலுகைளை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவிருக்கும்.
அத்துடன், கைவினை முறைமைகளின் ஊடாக காணிகளை பதிவு செய்யும் போது பல்வேறு மோசடிகள் இடம் பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் கணனி மயப்படுத்தல் சிறந்த விடயமாகும்.
இதன் ஊடாக வங்கி நடைமுறைகள் உள்ளிட்ட ஏனைய நடைமுறைகளின் போதும் இந்த முறைமை பயனுடையதாக அமையும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாகவிருக்கின்றது.
அந்த வகையில் இதற்கு தேவையான நிதி மற்றும் சட்ட பதிவுகளையும் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment