தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணா அம்மானை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம் எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்தர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் வேண்டும். விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்களும், தன்டனைகளும், எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தன.
சட்டக்கோவையை படித்தவர்ககளுக்கு நன்கு தெரியும். அரச காணி என்ற பேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும், பூர்வீக காணிகளும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. வேடுவ மக்களுடைய வெம்பு பூமி என்று சொல்லக்கூடிய அவர்களின் வாழ்வாதார நிலங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.
காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றுவரை தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ வழங்கப்படாமல் இன்று வரை கபடத்தனமாக மண் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை. அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கீகாரத்தை ஏமாற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இதுவரை எந்த சாதனையைத்தான் செய்திருக்கிறார்கள். எந்த சட்டத்தைதான் உடைத்திருக்கிறார்கள் அதனை நிரூபித்து காட்டட்டும் பார்ப்போம்.
இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்வதற்கு நாங்கள் கொத்தடிமைகள் அல்ல. அவர்கள் சரியான ஒரு தலைமையை முன்வைப்பார்களே ஆனால் விக்னேஸ்வரன் அல்ல செயற்திறன் உள்ள தலைமையை முன்வைத்தால் எமது கட்சி ஆதரவளிக்கத்தான் போகிறோம்.
உறுதியானதும் பற்றுதியுமான, நேர்மையுமான செயற்திறன் உள்ள ஒருவரை வேட்பாளராக நியமியுங்கள் என தமிழரசுக் கட்சியிடம் நான் கூறியிருந்தேன். அது மாத்திரமின்றி எங்களுடைய கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஒருவரிற்கு சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கூறியிருந்தோம்.
அவ்வாறு அவருக்கு சந்தர்ப்பம் தந்தால் பின்புலமாக இருந்து நாமும் செயற்பட்டு 22 அல்லது 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட்ட பகுதிகளில் பெறுவதற்கு முயற்சிப்போம்.
ஆனால் அந்த தலைக்கணமிக்க, பிரபுத்துவம் உள்ள சிந்தனை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை வழி நடத்திக் கொண்டிக்கிறவர்கள் இன்றுவரை இறங்கி வந்ததாக இல்லை. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இன்றும் எம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment