பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த

(இராஜதுரை ஹஷான்) 

பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். 

பதுளை, அதம்பிடிய பிரதேச நீர் வழங்கல் திட்டத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் அதம்பிடிய நீர்வழங்கல் திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டில் அடிக்கள் நாட்டப்பட்டு இப்போது திறந்த வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை 2 தொடக்கம் 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
இத்திட்டத்திற்காக 2240 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேர் பயனடைவார்கள். நாம் கடந்த காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் கிராமங்களில் வீதிகள், போன்றவற்றை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம். 

அதேபோன்று தற்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாகும். நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது. 

பெருமளவான அரசமுறை கடன் சுமையை மிகுதி வைத்துவிட்டே அவர்கள் சென்றுள்ளார்கள். நாங்கள் அதிக கடன்களை பெற்றதாக அவர்கள் குற்றம் சுமத்தினாலும் நாம் பெற்ற கடன்கள் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகம், விமான நிலையம், போன்ற பல்வேறு செயற்திட்டங்களை கட்டியெழுப்பியுள்ளோம். 
தற்போது புதிய அரசாங்கமும், புதிய ஜனாதிபதி, பிரதமரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. கடன்களை மீள்செலுத்துவதற்கு நாம் சட்டமூலமொன்றை கொண்டு வர தயாராகி வருகின்றோம். 

எதிரணி விரும்பினால் அதனை தோற்கடிக்க முடியும். அவ்வாறு தோற்கடிக்கும் பட்சத்தில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பயணம் பாதிப்படையும். ஆனாலும் நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களால் (எதிர்தரப்பினரால்) மிக சொற்ப காலத்திற்கே இடையூறு விளைவிக்க முடியும். 

ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முதலாவது வாய்ப்பு கிடைக்கும். அந்த முதல் வாய்ப்பிலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment