(எம்.மனோசித்ரா)
இலங்கையின் மிக முக்கிய விடயமாக தற்போது பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதால் இதற்கென அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான அமி பெரா, ஜோர்ஜ் ஹோல்டிங் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட் ஆகியோருக்கிடையில் நேற்று விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
சந்திப்பில் கலந்துகொண்ட காங்கிரஸ் உறுப்பினரான அமி பெரா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் நெருக்கமான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
இதன்போது தற்போது நாட்டின் மிக முக்கிய விடயமாக பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இதற்கென அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்த சந்திப்பை சிறந்ததொரு வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் ஜோர்ஜ் ஹோல்டின், காங்ரசின் இரண்டாவது மாவட்டமான கலிபோர்னியாவில் இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வர்த்தகம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட், ஆசிய வலயத்துக்குள் இலங்கை தனி சிறப்பிடம் பெற்றுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ளதோடு, வலுவானதும் இறையான்மையுடையதுமான இலங்கையை உருவாக்குவதற்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment