இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகாமல் கல்வித்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - பைஸர் முஸ்தபா இளைஞர்களுக்கு அறைகூவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 2, 2020

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகாமல் கல்வித்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - பைஸர் முஸ்தபா இளைஞர்களுக்கு அறைகூவல்

ஐ.ஏ.காதிர் கான் 

இளைஞர்கள் போதைப் பொருள் மயக்கமூட்டும் பாவனைகளுக்கு அடிமையாகாமல், கல்வித்துறையில் முன்னேறி நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

பைஸர் முஸ்தபா இளைஞர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு மருதானையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய கொழும்பு காரியாலயத்தில் (01) சனிக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மபாஸ் மொஹிதீன், சமயத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் கருத்துரை வழங்கும்போது, இன்று பெரும்பாலான இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களிடம் கல்வியறிவு என்பதை சிறிதேனும் காணமுடியாது. விளையாட்டுத் துறைகளிலும் இவர்கள் அசமந்தப் போக்கிலேயே உள்ளனர். இதனால், சமகால மற்றும் குடும்ப நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இளைஞர்கள் மிக அவசரமாக இவ்வாறான ஈனச் செயல்களிலிருந்து விடுபட வேண்டும். இதுவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது பாரிய எதிர்பார்ப்பாகும்.

கொழும்பைப் பொறுத்த மட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் காணப்படும் ஒரு இடம். இங்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சு அலுவலகங்கள் உள்ளிட்ட மக்களுக்கு அன்றாடத் தேவையாகவுள்ள பிரதான அலுவலகங்கள் நிறையவே உள்ளன. 
எல்லாவற்றுக்கும் மேலாக துறைமுகம், கல்விக்கூடங்கள், சுகததாஸ மற்றும் கெத்தாராம விளையாட்டரங்குகள் போன்ற மக்களுக்குத் தேவையான மிகப் பிரதானமான இடங்களும் அமையப் பெற்றுள்ளன. 

இவ்வாறான மிக முக்கியமான இடத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலான இளைஞர்களே, இன்று இப்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதனையிட்டு நான் பெரும் வேதனை அடைகின்றேன். 

எனவே, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள், அவற்றைக் கைவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கி வருமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றேன். 

கல்வி, விளையாட்டு இரண்டும், இரண்டு கண்களைப் போன்றது. இந்நிலையில், பெற்றோர்களும் பெரியோர்களும் இவ்வாறான இளைஞர்களை கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் மீது கரிசனை காட்ட வேண்டும். இதன்போது அவர்களை போதைப் பாவனைகளிலிருந்து நிச்சயம் மீட்டெடுக்க முடியும். 

இளைஞர்கள் அரச தொழிலையே நம்பி வாழக்கூடாது. சுய தொழில் முயற்சிகள் நிறையவே உள்ளன. இவற்றில் தமக்குத் தெரிந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம், தமது வாழ்க்கை ஜீவானோபயத்தை மிக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். இந்த மனோ பக்குவம் ஒவ்வொரு இளைஞரிடமும் வரவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment