முஹம்மது ரஸீன்
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின் 15 வருட கால மனிதநேய பணிகளை நினைவு கூரும் தொடர் நிகழ்வுகளின் முதலாவது செயற்பாடு, முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்துடன் இணைந்து சிறிஜயவர்ததனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு 13ஆம் திகதி காலை 9:00 மணிக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ கட்டத் தொகுதியில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், நாரஹகன்பிட்ட தேசிய இரத்த வங்கி வைத்தியர், தாதியர், முஸ்லிம் மஜ்லிஸ், மாணவர்களுடன் முஸ்லிம் எய்ட் ஊழியர்களும் பங்கேற்றனர்.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் கடந்த 15 வருட காலம் இலங்கைக்கு ஆற்றிய மனித நேயப் பணிகளையும், பல பலன்களையும் நினைவு கூரும் நோக்குடன் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு தொடர் நிகழ்வுகளில் முதலாவது செயற்பாடு இரத்தான நிகழ்வாகும்.
மர நடுகை, கடற்கரையோரங்களைத் தூய்மைப்படுத்தல், மாணவர்கள், இளைஞர்களை தேசிய அபிவிருத்தி நோக்கி ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்த பல்வேறு செயற்பாடுகள் இன்று தொடக்கம் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.
‘சிறிஜயவர்ததனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்’ மாணவர்கள் ‘முஸ்லிம் எய்ட் சிறிலங்கா’ நிறுவனத்துடன் இணைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வண. பிதா. ரஜிவ் அலெக்ஸாண்டர் “பிறருக்கும் அயலவருக்கும் உதவும் இக் கூட்டு முயற்சியானது மனிதகுலத்தில் பிறந்தவர்களின் கடமையாகும்” என்று குறிப்பிட்டார்.
அஷ்சேய்க் அர்கம் நூராமித் தனது ஆசீர்வாத உரையில் ‘ஒவ்வொரு மனிதரும் பிற மனிதருக்காக தியாகம் செய்வது மனிதப் பிறவியின் பொறுப்பாகும்’ என்றார்.
‘இவ்வாறான நிகழ்வானது தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒன்றாகும்’ எனக்குறிப்பிட்டார் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாப். ரோசான் அஜ்வத்.
இந்நிகழ்வின் பங்கேற்ற, பங்களிப்பு வழங்கிய அனைவரையும் வரவேற்று உரையாற்றிய முஸ்லிம் எய்ட் சிரேஷ்ட ஊழியரும் முஸ்லிம் எய்ட் இன் நிர்வாக முகாமையாளருமான இந்திகா அபேசூரிய முஸ்லிம் மஜ்லிருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
மேலும், 2019 தென்னாசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கொஸ் (Scosh) விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற பதோம் ஷலீஹா அவர்களும் அதிதியாக இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் எய்ட் பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சர்வதேச மனித நேய மற்றும் அபிவிருத்தி தர்ம நிறுவனமாகும். அதன் பதிவிலக்கம் : 1176462 (UK) / FL 104104.
இந்நிறுவனம் 1985ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு தற்போது கம்பூசியா, மியன்மார், பங்களாதேஷ், சோமாலியா, சிறிலங்கா போன்ற 20 க்கு மேற்பட்ட நாடுகளில் உலகலாவிய நீடித்த அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது என்ற உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.
உணவு, வதிவிடம், மருத்துவம், தூயகுடிநீர், மலசல கூட வசதிகள், கல்வி, இளைஞர் திறன் அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகள், நுண்கடன் வழங்குதல் அடங்கலாக அநாதைகள் மற்றும் அகதிகள் பராமாரிப்பு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
அடிப்படைத் தேவைகள் இன்றி வாடுகின்ற அனைத்து மக்களுக்கும் அவர்களது இன, சமய, பால், தேசிய மற்றும் அரசியல் வேறுபாடுகள் பாராது முஸ்லிம் எய்ட் மனித நேயப் பணிகளை ஆற்றி வருகின்றது.
மேலும், வறுமை, குறை அபிவிருத்தி என்பவற்றிற்கு அடிப்படையாக உள்ள காரணிகளை சரியாக அடையாளங்கண்டு தீர்வு காண்பதுடன், நீதியான சமூகத்தை உருவாக்குவதையும், உறுதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதிலும் முஸ்லிம் எய்ட் தொடர்ச்சியாக பாடுபட்டு வருகின்றது.





















No comments:
Post a Comment