இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் சென்ற நான்கு இந்தியர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி குதிரைமலை கடல் பிரதேசத்திலேயே புதன்கிழமை மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடற்படையினர் குதிரைமலை கடல் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான தமிழக மீன்பிடி படகு ஒன்றை அவதானித்து அப்படகை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது படகினுள் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 41 தங்க பிஸ்கட்டுக்களைக் கைப்பற்றினர். அத்துடன் படகில் பயணித்த நான்கு இந்திய பிரஜைகளையும் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
4 கிலோவும் 200 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 30, 35, 36 மற்றும் 50 ஆகிய வயதுகளையுடைய தமிழ் நாட்டைச் சேர்ந்த 4 இந்தியர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்களையும் கைப்பற்றிய தங்கத்துடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதோடு சந்தேகநபர்கள் பயணித்த படகு கல்பிட்டி கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment