இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான திசர பெரேரா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இராணுவ தன்னார்வ தொண்டர் படைப்பிரிவின் மேஜராக திசர பெரேரா பணியாற்றவுள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கியுள்ளார்.
இலங்கை ஒருநாள் மற்றும் ரி 20 அணிகளின் முன்னாள் தலைவரான திசர பெரேரா, இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைச் சதத்துடன் 2210 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 171 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
இவர் 79 ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 அரைச் சதங்களுடன் 1169 ஓட்டங்களை எடுத்து 51 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கிடையிலான அழைப்பு ஒருநாள் தொடரில் (29) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை இராணுவ அணிக்காக முதல்தடவையாக திசர பெரேரா களமிறங்கியிருந்தார்.
என்.சி.சி கழத்துடன் நடைபெற்ற குறித்த போட்டியில் திசர பெரேரா பந்துவீசாவிட்டாலும், துடுப்பாட்டத்தில் 16 ஓட்டங்களைக் பெற்றிருந்தார்.
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு மூன்று வீரர்களையும், எட்டு வீராங்கனைகளும் உருவாக்கிக் கொடுத்த இலங்கை இராணுவம், தற்போது உள்ளூர் முதல்தர கழகங்களில் ஒன்றாக செயற்பட்டு வருகின்றது.
இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டு அஜந்த மெண்டிஸ், சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்ன ஆகிய 3 வீரர்களும் தேசிய அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான தினேஷ் சந்திமாலும், கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கை இராணுவத்தின் தன்னார்வ தொண்டர் படையணியில் ஒரு மேஜராக இணைந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment