யாழில் டெங்கு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

யாழில் டெங்கு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவித்தல்

பரவி வரும் டெங்கு நோய் தொடர்பில் மக்களுக்கு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால், மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை விரைந்து சுத்தப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

அத்தோடு பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குவளைகள் மற்றும் இதர குப்பை கழிவுகளை உரிய முறையில் தரம் பிரித்து அகற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தங்கள் வீட்டுச் சூழலில் வெற்றுக் கொள்கலன்களில் நீர் தேங்கி நுளம்புகள் பெருகாமல் பார்த்துக்கொள்வது தங்கள் பொறுப்பும் கடமையுமாகும்.

டெங்கு நோய்த் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் உள்ள நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு மாநகர சபையின் வழமையான வட்டார திண்மக் கழிவகற்றல் நடைமுறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமைகளில் இக்கொள்கலன் கழிவுகளை வட்டார ரீதியாக அகற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் தங்களின் வீட்டின் முன்புறம் பிரதான நுழைவாயில் உட்பட சுற்றுச் சூழலில் உள்ள புல், பூண்டுகளையும் தாங்களே அகற்றி சுத்தப்படுத்தி டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் துப்புரவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மாநகர சுகாதாரப் பிரிவினர் மற்றும் சுற்றாடல் பொலிஸ் பிரிவினர் தங்கள் வீடுகளை பரிசோதிக்க வருகின்றபொழுது, மேற்படி விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்படும். அச்சமயம் தங்கள் வீடுகளில் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தமாக காணப்படா விட்டாலோ உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் முற்கூட்டியே அறியத்தருகின்றோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்சன் விநோத்)

No comments:

Post a Comment