இலங்கை - இந்திய உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

இலங்கை - இந்திய உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்திய - இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும், இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்துக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் தனது முதலாவது அரசமுறை வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்கும் நிகழ்வு ராஸ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. 

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை பலப்படுத்தும் முக்கியமானதொரு சந்திப்பாகும் எனத் தெரிவித்தார். 
புதிய இலக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய இந்திய ஜனாதிபதி, இதற்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்திய பொது போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வீ.கே. சிங் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பங்குபற்றினர். 

அதனைத் தொடர்ந்து ராஜ் காட் (Raj Ghat) சென்ற ஜனாதிபதி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் ஜனாதிபதி இதன்போது கையெழுத்திட்டார்.

No comments:

Post a Comment