(ஐ.ஏ. காதிர் கான்)
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் குறித்த பிரச்சினைக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, (02) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளேன்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச் சட்டம் தொடர்பில் சட்டத் திருத்த நகல்களைச் சமர்ப்பித்தோம். ஆனால், இன்று வரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நான் அவசரக் கடிதமொன்றையும் அனுப்பி வைத்தேன். அந்தக் கடிதத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு குறித்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியிருக்கின்றேன். அதற்கான சிறந்த பதிலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
உண்மையில், இந்த விவகாரம் இழுபறியான நிலையில் இருந்து வருவதையிட்டு நான் கவலையடைகின்றேன். நாங்கள் அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். பெண்கள் அமைப்புக்களும் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு தரவேண்டும் என்று அடிக்கடி எம்மிடம் வலியுறுத்திக் கேட்டு வருகின்றனர்.
எனவே, முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களுக்குரிய கௌரவங்களை வழங்குவதும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் ஒரு பங்கிருக்கின்றது.
முஸ்லிம் பெண்களின் இருப்பு, இன்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வருவதை அவதானிக்கின்றேன். இது எனக்கு கவலை அளிக்கின்றது. உடனடியாக இதற்கு மிக அவசரமாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment