முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.
சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகை தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
கிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.
வன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
வன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment