கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (17) கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தற்காலிகமாக கடமையாற்றி வந்தவர்களுக்கே இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது, கிழக்கில் நியமனங்கள் வழங்கும் போது பாகுபாடற்ற விதத்தில் எவ்வித நியமனங்களும் வழங்குவதற்கு இடமளிக்க மாட்டேன். ஜனாதிபதி என்னை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை என்னை நம்பியே.
ஜனாதிபதி என்னை கிழக்கு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அனுப்பி வைத்துள்ளார். அதனை பாதுகாத்து மக்களுக்கு எவ்வித இன மத பாகுபாடின்றி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கிறேன் என்றார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நீங்கள் வீதி அதிகார சபையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். அதனை சிறப்பாகவும் கண்ணியமாகவும் மதித்து செயற்பட வேண்டும். உங்களுடைய சேவையில் நீங்கள் இனப் பாகுபாடு காட்டக் கூடாது.
நாம் அனைவரும் நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாளராக மாற வேண்டும். இந்நியமனங்கள் மூலம் சிறந்த சேவைகளை வழங்குவீர்கள் என நம்புகின்றேன் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
ரொட்டவெவ குறூப் நிருபர்
No comments:
Post a Comment