அரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம் - எழுக தமிழ் எழுச்சி பேரணியில் பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 17, 2019

அரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம் - எழுக தமிழ் எழுச்சி பேரணியில் பிரகடனம்

இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கம் எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன் தமிழ் மக்களின் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. 

எனவே எமக்கான ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் அவசியத்தில் அதற்கான காத்திரமான செயற்திட்டங்களை முன்வைத்து எமது தேசிய அரசியலுக்கான வலுவான மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என எழுக தமிழில் பிரகடனம் செய்யப்பட்டது.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அம் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் எழுக தமிழ் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பேரணியாக ஆரம்பித்து யாழ்.முற்றவெ ளியை அடைந்து அங்கு இடம்பெற்ற பொது நிகழ்வில் இப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரான டொக்டர் பூ.லக்ஸ்மன் பிரகடனத்தை வாசித்தார்.

இப் பிரகடனத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கான ஓர் தீர்வாகவும், சர்வதேச சமூகம் நம்புவதுபோல நிலைமாறுகால நீதிக்காகவும் தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சியென அறிமுகப்படுத்தப்பட்டதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவானது கடந்த 2018 ஓக்டோபர் மாதம் ஆட்சிக் குழப்பத்தோடு வழமைபோல தோல்வியில் முடிவுற்றது.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிவரும் தமிழ்த் தேசமானது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சந்தித்த பொழுதும் தனது அடிப்படையான கூட்டுரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருந்து வருகின்றது.

இவ்வாறான ஓர் சூழலில் இன்றைய எழுக தமிழ் 2019 பேரெழுச்சியானது நம்பிக்கையிழந்த எம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் ஒன்றுபட்ட எழுச்சியாகவும், பல்வேறு நாடுகளில் உலகத் தமிழர்கள் முன்னெடுக்கும் ஒருமைப்பாட்டு எழுச்சிகளின் திரட்சியாகவும் தென்னிலங்கைக்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஒரு வலுவான செய்தியை சொல்லி நிற்கின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகின்றது. 

இராணுவ நிலைகளை அதிகரித்தல் அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வனபரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடல் நீரியல் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், உல்லாசப் பயணத் துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனை கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு, சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. இதன் உச்சமாக அண்மையில் நடந்த இராணுவத் தளபதியின் நியமனத்தைக் காணலாம். 

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே சர்வதேச விசாரணையை தவிர வேறு வழியில்லை. இதனைச் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டு காலத்தின் பின்னரும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளவரை அரசியற் கைதிகளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புக்களை - தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகின்றது. இது இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது வரை சென்றிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 900 நாட்களைக் கடந்து விட்டது. அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இலங்கை அரசானது இராணுவ மயமாக்கலின் ஊடாக தமிழ் சமூகத்தினைப் பிளவுபடுத்தி, சமூக உறவு முறைகளைச் சிதைத்து, தமிழர் கூட்டாக ஜனநாயக ரீதியில் அணிதிரள்வதற்கு எதிராக திட்டமிட்டு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

படைத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்களால் எமது பிரதேசக் கடல் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மீனவர்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுடன், வாடிகளை அமைத்து தமிழ் மீனவர்களது வாழ்வாதாரங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் எமது மீனவர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது பாராம்பரிய வாழ்விடங்களில் குடியமர முடியாத நிலை இன்னமும் தொடர்கின்றது.

வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதனூடாக இலங்கை இராணுவம் தமிழர்களின் இருப்பினை மலினப்படுத்துகின்றது.

இந் நிலையிலேயே எம் மக்கள் தமிழ் தலைமைகளுக்கும் முன் சென்று தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் தலைமையேற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி, இருக்கக் கூடிய சர்வதேச நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையை நடத்த வலியுறுத்துகிறோம். 

மேலும் தமிழ் மக்களுக்காகன அரசியற் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய வேறில்லை என்பதை தொடர்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன.

அந்த வகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டவாறு பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழ்த் தேசமும், அதனுடைய இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வாகவே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள அரசியற் தலைவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

தற்போது அரசியல் அமைப்புச் சபையினால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையானது உள்ளார்ந்த ரீதியில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒற்றையாட்சி முறையையும் சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான ஓர் யோசனையாகும். அதனை தமிழ் மக்களாகிய நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.

இந்த வகையிலேயே எம்மக்கள் முன்னின்று நடத்தும் பேராட்டங்களின் கோரிக்கைகளும் தமிழ் மக்களது அரசியற் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினது தீர்வுத் திட்ட யோசனைகளும் இவ் எழுக தமிழ் பேரெழுச்சியின் பிரகடனங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

இலங்கை அரசே, சர்வதேசமே!!

சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கு

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியான தீர்ப்பை முன்வை

வடக்கு - கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து

இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமர்த்து

சர்வதேசமே! இலங்கையில் தமிழர் மீதான இனவழிப்பு விசாரணையை நடத்து

எமது மக்களின் தொடர் போராட்டங்களையும், எழுச்சிகளையும் நமது தேசத்தின் பலமாக மாற்றுவது தொடர்பாக நாம் காத்திரமான யோசனைகளை முன்வைத்துச் செயற்பட வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் அடிப்படைகள் பேரம் பேச முடியாதவை, அவ்வாறே அதனைத் தாங்கி நிற்கும் தமிழ் தேசத்தின் திரட்சியான எழுக தமிழும் என்றுமே பேரம் பேச முடியாதவை.

யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை விசேட நிருபர்கள்

No comments:

Post a Comment