பாராளுமன்றத்தில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சார சட்டமூல திருத்தம் மீளப் பெறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஒழுங்குப்பத்திரத்திற்கு அமைய, சபாநாயகரினால் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்போது, குறித்த சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார் எனவும், இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இத்திருத்தத்தின் மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாமல் செய்வதற்கும் அமைச்சர் தனக்கு விரும்பிய விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இடமளிப்பதாகவும் அமைவதால், இச்சட்டத்தைத் திருத்துவது அரசியலமைப்புக்கு முரண் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இச்சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவதற்கே அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல், மீளப் பெறப்பட்டது.
இதனால் நேற்றையதினம் ஒன்றரை மணித்தியாலங்களில் சபை அமர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதோடு, சபாநாயகர் பாராளுமன்றத்தை இன்று பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைத்தார்.
(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)
No comments:
Post a Comment