உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகவுள்ளதாக அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடவுள்ளது.
இதன்போது பிரதமருடன் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரும் சாட்சி வழங்கவுள்ளதாக ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சி விசாரணைகளின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பதற்காக திகதி ஒன்றைக் கோர எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி,கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்க ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment