பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று (16) முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள போதிலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மலையக தபால் சேவைகள் வழமை போலவே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளி பிரதேசங்களில் இருந்து வரும் கடிதங்கள் குறைந்து காணப்பட்ட போதிலும் பிரதேச ரீதியாக கடித பரிமாற்றங்கள் ஏனைய நாட்கள் போலவே இன்றும், இடம் பெறுவதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மத்திய தபால் நிலையம் மாத்திரம் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் சேவைகள் ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
குறித்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் இந்த தபால் சேவை சங்கம் குதிக்கப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஆகஸட் மாதம் க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், அவர்களுக்கு உரிய தேசிய அடையாள அட்டைகள், பரீட்சை அனுமதி பத்தரங்கள் ஆகியன தபால் மூலமே பரீட்சாத்திகளின் கைகளுக்கு வந்து சேரவுள்ளன.
ஆகவே, இவர்கள் தொடர் போராட்டத்தினை தொடர்வார்களே ஆனால் பரீட்ச்சாத்திகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment