சஹ்ரானின் போதனையில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட மருதமுனை இளைஞன் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 3, 2019

சஹ்ரானின் போதனையில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட மருதமுனை இளைஞன் பிணையில் விடுதலை

சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த இளைஞன், கல்முனை நீதவான் நீதிமன்றினால் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவரது கைது விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட மனு, இன்று புதன்கிழமை (03) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸ் சார்பில் ஆஜரான அப்துல் ஹை, குறித்த நபர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான ஏதுக்கள் இல்லை என அறிவித்ததைத் தொடர்ந்து, இவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி, இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.

இவற்றை செவிமடுத்த நீதவான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு முடிவுறும் வரை ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேக நபரைப் பணித்ததுடன் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டது.

சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.எம். முபீத் தலைமையில் சட்டத்தரணிகளான எம்.ஐ. இயாஸ்தீன், ஏ.ஜீ. பிரேம் நவாத், எம்.எப். அனோஜ், எம்.ஐ. றைசுல் ஹாதி, ஐ.எல்.எம். றமீஸ், என்.எம். அசாம், றத்தீப் அஹமட் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

அஸ்லம் எஸ்.மெளலானா, பாறூக் ஷிஹான்

No comments:

Post a Comment