இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் போது முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்
1. அரசியல் தீர்வு
இலங்கை நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழினப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படாத காரணத்தால் இடம்பெற்று வரும் ஜனநாயக வழிப் போராட்டங்களினாலும், ஆயுதப் போரின் விளைவுகளாலும், 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களாலும், சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினாலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பொருட்டு இடைக்கால அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்த பொழுதிலும் தமிழினப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. தாமதங்களும், தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை மிக விரைவில் இவ்வாண்டுக்குள் ஏற்படுத்த வேண்டுமென அரசையும், அரசியல் கட்சிகளையும், அனைத்து சமூகங்களிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
அவ் அரசியல் தீர்வானது ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையான்மை, சுய நிர்ணய உரிமை, மனித உரிமை வாழும் உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகின்றது.
2. ஐ.நா. மனித உரிமைத் தீர்மானம்
ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். 2012 முதல் 2015 வரை இலங்கை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1, 34/1, 40/1 ஆகியன முழுமையாக கால அட்டவணையில் நிறைவேற்றவும், நடைமுறைப்படுத்தவும், மக்கள் பயனுறவும் உத்தரவாதம் அளிக்கவும், நம்பகத்தன்மை நிலைநாட்டப்படவும் வேண்டும். ஐ.நா.மனித உரிமைப் பேரவையும் ஐ.நாவும் இத்தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றது இம் மாநாடு.
3. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிப்பு
போர்க் காலத்தில் முப்படைகளினாலும், காவல் துறையினாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார், அரச நிலங்கள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகின்றது. அத்தோடு மகாவலித் திட்டத்தின் கீழும், வனவிலங்கு பரிபாலனத்துறை, சுற்றுச் சூழல்துறை, தொல்லியல், கரையோரப் பாதுகாப்பு கனிம முதலான திணைக்களம் அரச மற்றும் அரச துறைகளினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நிலமற்ற, வீடு அற்ற, தொழிலற்ற மக்களுக்கு நிலங்கள் வீடுகள், தொழில் வாய்ப்புக்கள் வழங்கும் வகையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது. இந் நிறுவனங்களின் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டுமென ஜனாதிபதியையும், அரசையும் வற்புறுத்திக் கோருகின்றது இம் மாநாடு.
4. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் போர்க் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், உறவினரால் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் வழங்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசுக்கும் உண்டு. ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் சிபார்சுகளும், நடவடிக்கைகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இப் பிரச்சனையை காலம் தாழ்த்தாமல் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
5. மீள்குடியேற்றம்
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தத்தம் நிலங்களில் உடன் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். மக்கள் வாழ்வுரிமை அங்கீகரிக்கப்பட்டு நிலமற்றவர்களுக்கு நிலம், தொழில் அற்றவர்களுக்கு தொழில், வீடு அற்றவர்களுக்கு வீடு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களை அவர்கள் விருப்பறிந்து அவர்கள் இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகின்றது. புலம்பெயர்ந்த மக்கள் இரட்டைக்குடியுரிமை பெறுவதற்கும் முதலீடுகள் செய்வதற்கும் உள்ள பொருத்தமான இலகுமுறைகள் சட்ட நடவடிக்கை உருவாக்கப்பட வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறுவதற்கும் மீள் கட்டுமானப் பணிகளுக்கும் அரசு போதிய நிதியையும் வளங்களையும் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்.
6. கைதிகள் விடுதலையும் பயங்கரவாத தடைச்சட்டமும்
போர் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமெனவும், அதற்குவசதியாகவும், நடைமுறைச் சாத்தியமாகவும் உலகதரம் மிக்க சட்டமொன்றை தேவைப்படின் கொண்டுவருவதற்குப் பொருத்தமாகத் தற்போதுள்ள கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டமானது (Prevention of Terrorism Act) உடன் நீக்கப்படவேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.
7. தொழில் வேலைவாய்ப்பு
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்விகற்ற, பட்டபடிப்புக் கொண்டவர்களுக்கு மூப்பு அடிப்படையில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து வேலையற்றவர்கக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அரசுத்துறையில் வேலைவாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள் வயது கூடியவர்கள் இருப்பின் 45 வயதுடையவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவைத் தீர்மானமொன்றை உடன் நிறைவேற்றவேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகின்றது. மேலும் நீண்டகாலமாக சம்பளம் கூட இல்லாமல் ஆசிரியர்களாக இருக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும். குறைந்தது 15ஆயிரம் ரூபாஆரம்பத்தில் வழங்கவும் அரசும்,மாகாணசபையும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இறுதியாக தொண்டர் ஆசிரி நியமனத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து தகுதியுடைடயோருக்கு இவ்வாண்டுக்குள் நிரந்தர நியமனம் வழங்கவும் வேண்டும்.
8. (அ) போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பு
போர் காரணமாகக் கல்வி பெற வாய்ப்புஅற்றவர்கள் குறிப்பாக போராளிகளாக இருந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி,தொழில்நுட்பப் பயிற்சி வழங்கி அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்களுக்கும் அடிப்படைச் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கேற்ப வழங்கவேண்டும். அதுவரை அவ்வாறனவர்கள் வாழுவதற்கு நிதிஉதவி வழங்கும் முறையொன்றைக் கொண்டுவரவேண்டும். ஜனநாயக நீரோட்டத்தில் இணைக்கப் பொருத்தமான நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது. இராணுவத்திடமுள்ள பண்ணைகள் விடுவிக்கப்பட்டு போராளிகளாய் இருந்தவர்களின் முகாமைத்துவத்திடம் ஒப்படைக்கவும் வேண்டும்.
(ஆ) மேலும் இதற்குப் பொருத்தமாக அரசுத் துறையிலும், ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் அவ்வப் பிரதேசங்களிலிருந்தே சிற்றூழியர் ஆயினும் நிரப்புதல் வேண்டும். வேலைவாய்ப்புக்கள் அவ்வப் பிரதேசங்களிலிருந்தே நியமனம் செய்யப்படவேண்டும். அந்த விடயங்களில் தவறாக நிரப்பப்பட்டிருந்தால் அவர்களை திருப்பிப் பெறவேண்டும். உரிய பிரதேசங்களில் இடமாற்றம் வழங்கவேண்டும். பொருத்தமான தொழில்துறைகள் உருவாக்கப்படவும் வேண்டும்.
9. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 90 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதுவாழ்வு, வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு பெறக்கூடியவகையில் தொழில் துறைகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வுரிமை உறுதிப்படவேண்டுமென மாநாடு வற்புறுத்துகிறது. வரவுசெலவுத்திட்ட அறிவிப்புக்கள் முழுமையாக பயனுறவில்லை. எனவே புதிய அணுகல் முறைகளில் அக்;குடும்பங்கள் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் புதுவாழ்வு பெற உடன் அரசு செயலாற்ற வேண்டுமென வற்புறுத்துகிறது இம் மாநாடு.
10. (அ) இலங்கை நாட்டில் பெண்களின் குடிசன மதிப்பீடு 53% தான் வருகின்றது. பொதுமக்கள் பிரதிநிதித்துவத்தில் பாராளுமன்றத்திலும், மாகாணத்திலும், உள்ளூராட்சியிலும் போதிய பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். பெண்கள் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். பாலியல் வன்முறைகளிலிருந்து சிறுவர் துஸ்பிரயோகங்களிலிருந்து பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்படவேண்டும். பாலியல் வன்முறைகளில், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக தண்டனை வழங்கப்படுதல் துரிதப்படுத்தப்படவேண்டும் என வற்புறுத்துகின்றோம்.
11. தொழில் துறைகள்
போர் காரணமாக அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட பெருந் தொழிற்சாலைகள் பொருத்தமான வகையில் நவீன மயமாக்கப்பட்டு மீளக் கட்டியெழுப்புதல், போரினால் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு அற்றிருக்கும் இளைஞர்,யுவதிகளின் எதிர்கால வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமாக புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதியசிறுதொழில்கள், மத்தியதர தொழில்கள் பெருந்தொழில்துறைகளை குறுகியகால, நீண்டகால அடிப்படையில் உருவாக்கவேண்டும். பெரு முதலாளித்துவ முதலீடுகளுக்கு ஈடாக மக்கள் கூட்டாகவும் பங்களிப்பும் முகாமைத்துவமும் செய்து பயனுறும் தொழில்துறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.
12. தெங்குபனம் பொருள் அபிவிருத்தி
(அ) பனம் பொருள்துறைகள், பதநீர், கருப்பட்டி மற்றும் பனைவள உற்பத்திகள் மற்றும் திக்கம் வடிசாலை அபிவிருத்தி, கள்ளு போதையற்ற நிலையில் போத்தலில் அடைத்தல் அதனை சந்தைப்படுத்தல் நவீனமுறையில் ஏற்படுத்தவேண்டும். அதனால் பெறப்படும் இலாபங்கள் கூட்டுறவாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது.
13. மீன்பிடித்துறை
மீன்பிடித்துறையில் நவீன தொழில்நுட்பமும் பயிற்சியும், சந்தைப்படுத்தலும் அவசியமாகப்பட வேண்டும். மட்டக்களப்பு கல்லடியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஐஸ் கட்டிதொழிற்சாலை புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படவேண்டும். மீன் பதனிடுதல் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையிலும் ஏற்றுமதி செய்வதற்கும் பாதுகாப்பான தகரத்தில் அடைத்தலுக்கு ஏற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவேண்டும். இலாபங்கள் தொழில் செய்பவர்களுக்கே செல்லும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். உருவாக்கப்படும் மீன்பிடித்துறைகள் பல நாள் மீன்பிடி படகுகள் (Multi day Multi Boats) பயன்படுத்தவும் அத்துறையில் நவீன பயிற்சிகளும் தொழில் புரிவோர்க்கு வழங்கப்படுதலும் வேண்டும். இப் படகுகளுக்கு 50% நிவாரணம் உண்டு.
14. கல்வி
ஆரம்பக் கல்வி கற்பதும் கட்டாயமானதாகும். பல்கலைக்கழக மற்றும் தொழில் துறை கற்கை நிறுவனங்கள்,தொழில்நுட்பக் கற்கைகள் வடக்குக் கிழக்கில் பிராந்திய உயர் கற்கை நிறுவனங்களாகவும், அனைத்துப் பீடங்களையும் கொண்டதாகவும் மாணவர் அனுமதியில் 75% க்கு மேல் அந்தந்தப் பிராந்தியங்கிளிலிருந்தே திட்டமிட்ட அடிப்படையில் தேர்ந்தெடுப்பதும் தொழிலை உறுதிப்படுத்துவதும் அறிவியல், மருத்துவம், பொறியியல் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு 65மூமானவர்களை உள்வாங்குதலும் உருவாக்குதலும் வேண்டும் என மாநாடு வற்புறுத்துகிறது.
15. நில, நீர் உரிமை நிலைநாட்டல்
மகாவலி நீர் வேளாண் அபிவிருத்தியில் குடிசார் மக்கள் இனவீதமாற்றம் (not to change demographic pattern) ஏற்படாதவகையில் நீர் பாய்ச்சல்,குளங்கள் என்பவற்றிற்கு நீர்பாசனத்திற்கு மட்டுமே அத்திட்டங்கள் பயனுறவேண்டும். அபிவிருத்தியில், குடியேற்றத்தில் அப்பிராந்திய மக்களுக்கே முற்றிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இத் திட்டங்கள் எவ்வகையிலும் இன விகிதாசாரம் மாற்றப்படாமலிருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
16. வங்கிக் கடன் இரத்து
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிகள், கடன்கள் வழங்கியிருந்தன. அக் கடன்கள் அம் மக்களுக்கு வாழ்வாதரத்தை ஈட்டிக் கொடுக்கவில்லை. கடன் பெற்றவர்கள் போரில் உடமைகளை, தொழிலை இழந்தவர்கள் கடன்களைத் தீர்க்கமுடியாமல் இருந்ததையும் இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் பெற்ற கடன்களை இரத்துச் செய்யவேண்டும் என வற்புறுத்துகின்றது இம் மாநாடு. தற்போது சில படுகடன்களை அரசு செலுத்தி வருகிறது நன்றேயாகும்.
17. தொழிற்சங்க உரிமை
பல துறைகளிலும் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக உழைத்துவரும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்படவேண்டும். அச்சங்கங்களுடன் அரசுபிரச்சனைகள் எழும்போது அவர்களுடன் ஜனநாயகரீதியில் பேச்சுக்கள் மூலம் இணக்கம் ஏற்பட முயற்சிப்பதுதான் தேவையென வற்புறுத்துகிறோம்.
18. தேர்தல்களில் மலையகமக்கள், முஸ்லீம் மக்கள், பெண்கள் குறிப்பாக ஏனைய சமூக மக்கள் பெரும்பான்மையாயிருக்கும் நிலையில் அவ் வட்டாரங்களில், தொகுதிகளில் தனியான ஒதுக்கீடுகள் வீதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டும்.
19. வடக்கு, கிழக்கு மீனவர்களின் தொழிலுரிமை பாதுகாக்கப்படுத்தப்படல் வேண்டும். மீன் பிடிப்பதிலும் கலங்களைப் பயன்படுத்துவதிலும் நவீன பயிற்சிகளும், சிறந்த பாவனைக்குரிய கலங்கள் தனித்தும், கூட்டாகவும் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு நவீன முறைகளைக் கையாள உதவவேண்டும். சந்தைப்படுத்தலில் தொழிலில் ஈடுபடுபவர்கள் முழு அளவில் வருமானத்தை ஈட்டுவதற்கும் பொருத்தமான வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தவேண்டும்.
வடக்குக் கிழக்கு மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து கடலில் தொழில் செய்வதற்கு தடையாகவும், மீன்வளத்தை அழிக்கும் வகையிலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள், வள்ளங்கள் பயன்படுத்துதல் தென்னிலங்கை மீனவர்களும் அயல் நாடுகளிலிருந்து பெரும் கலங்களையும், இயந்திரங்களையும் வடக்குக் கிழக்குப் பிராந்தியக் கடலில் வந்து தரித்து நின்று ஆக்கிரமித்து மீன் வளத்தை அள்ளிச் செல்வதினாலும் ஊர் மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
20. வடக்குக் கிழக்கில் கூட்டுறவுத்துறை ஒருகாலத்தில் இலாபத்துடன் மக்களுக்குப் பெரும் சேவை ஆற்றி வந்தது. போர் காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே அச்சுறுத்தல் மத்தியிலும் பெரும் உதவியாக விளங்கியது. அக்காலத்திலும், அதன் பின்னரும் கூட்டுறவுச் சங்கங்களின் சொத்துக்கள் அழிக்கபட்டும் கடன்பட்டும் நிலைக்கும் தள்ளப்பட்ட கூட்டுறவு ஊழியர்கள் சம்பளம் பெறாமலே பலகாலம் தம்மை அர்ப்பணித்து மக்களுக்கு உதவி வந்தனர். குறிப்பாக வடபகுதியில் கூட்டுறவுத்துறையடைந்துள்ள நட்டங்களுக்கும், கடன்களுக்கும் அரசு பொருத்தமான உதவி வழங்கவேண்டும். மீண்டும் கூட்டுறவுத்துறைக்குப் புத்துயிர் அளிக்கவேண்டுமென அரசையும், மாகாணசபையையும் வற்புறுத்துகின்றது இம் மாநாடு.
21. அண்மையில் 2018 இல் நடைபெற் உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்களினால் உருவாக்கப்பட்ட சபைகளுக்கு நிதி உட்பட்ட கூடுதலான அதிகாரங்கள் அரசியலமைப்பினால் வழங்கப்படவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு போதிய நிதி நன்கொடைகள் கிடைக்க வழி செய்யவேண்டும்.
22. பனை,தென்னை அபிவிருத்திச் சபை
மாகாண அதிகாரத்தில் கொண்டு வரவேண்டும். பனை தென்னை அபிவிருத்திச் சபைக் கூட்டுறவுக் கட்டமைப்பினால் நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். திக்கம் வடிசாலை நவீனவசதிகளுடன் மீளக் கட்டியெழுப்ப அரசின் ஒப்புதல் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தலையிட்டு திக்கம் வடிசாலையை கட்டியமைக்க கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசு, தனியார் தேயிலை, றப்பர் முதலான தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கேற்பச் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
24. நெல், வெங்காயம் முதலான வேளாண் விளைச்சல், மீன் வளம், பனை வளம் முதலான உற்பத்தி பண்டங்களுக்கு நியாய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். வேளாண்மை அறுவடைக் காலங்களில் அவ்வுற்பத்திகள் இறக்குமதி நிறுத்தப்படவேண்டும். சந்தைப் பொருளாதாரம் வர்த்தகம் உயர்த்துவதற்கு பொருளாதார மையங்கள் உருவாக்கப்படவேண்டும். உலகதர உற்பத்திகளைப் பெருக்கவேண்டும். இயற்கை வேளாண்மைக்கும் சந்தைப்படுத்தலுக்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்.
(அ) உலக சந்தைப் பொருளாதாரத்துடன் போட்டியிடக் கூடிய புதிய உற்பத்திகள், மாற்றுப் பயிர் விளைச்சல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அறிமுகப்படுத்திய அதேவேளை பெருவர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளுர் வர்த்தகம் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
25. உலகதர ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுள் வேதம், அதற்குரிய மருத்துவர்கள், தாதிகள் சிற்றூழியர் தேவைக்கேற்றவாறு நியமிக்கப்பட வேண்டும். சித்த மருத்துவபீடம் தரமுயர்த்தப்பட வேண்டும். கல்வித் துறைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(அ) மக்களின் உடல் நலம் உலகசுகாதார மேம்பாட்டை கொண்டதாகவும் அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உலகதர மருத்துவம் உறுதிப்படுத்தவும் பொருத்தமான மருத்துவர்கள், தாதிகள் (Nurses) நியமனம் செய்யப்பட வேண்டும்.
26. ஊடகவியலாளர்
ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது ஜனநாயகக் கடமையாகும் இருந்தும் பல ஊடகவியலாளர் தமிழ் சிங்கள ஆசிரியர்களுட்பட மர்மமான முறையிலும் நேரடியாகவும் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகத்துறை மிகுந்த அச்சுறுத்தலுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகி வருகிறது.
இத்தகைய கொலைகள் அச்சுறுத்தல்கள் பற்றி முழுமையான நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கொலைகள் அச்சுறுத்தல்களின் பின்னணிகள்,உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும். இதற்காக ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவும் வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு நிவாரணம் வழங்கவும் வேண்டும்.
27. வடக்குக் கிழக்கிற்கு இணைந்த கட்டுமானமும் மேற்பார்வையும் (Monitoring & Combined Mechanism for NE Economic Development) போரினால் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் துறைகளிலும் முழுமையான ஒன்றினைந்த திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு அத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவும் நிபுணத்துவமும், வினைத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட பொறிமுறை நிறுவப்படவேண்டும். போரினால் சீரழிந்த நாடுகளின் மீளக் கட்டியெழுப்புவதில் அனுபவம் நிபுணத்துவம் மிக்கவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் காலஅட்டவணையில் அத்திட்டங்கள் நிறைவேற்றப்படுதலும் உறுதிசெய்யப்பட வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது.
இந்தப் பிரகடனத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின்பால் அதிக அக்கறையை அரசு செலுத்தவேண்டும் என்றும், கூட்டு எதிர்கட்சி உட்பட அனைத்து அரசியலாளர்கள், சிவில் சமூகத்தினர்,மதத் தலைவர்கள், அரசதுறைசாரா நிறுவனங்கள், அறிவுழைப்பினர் (புத்திஜீவிகள்) உள்ளிட்ட நாட்டு நலனின்பால் அக்கறையுள்ள அனைவரும் தங்களாலான சாதக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அக்கறையோடும் அன்போடும் வேண்டி நிற்கின்றோம்.
சென்ற ஏப்ரல் 21ன் பின் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அதைவிட நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) பாரதூரமானது. அரசுத் தலைவர்கள், அரச நிர்வாகிகள் இராணுவத் தரப்பினர், காவல் துறையினர் எதேச்சாரிகரமாகப் பயன்படுத்துவதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சிறைகளில் எல்லையற்று கைதிகளாகி வருகின்றனர். ஐ.நா.மனித உரிமைப்; பேரவை, மனிதநேய அமைப்புக்கள் வற்புறுத்தியும் இப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வில்லை. ஆகவே இச்சட்டத்தினை உடன் நீக்கவேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.
பலாலி விமானப் போக்குவரத்து இந்திய அரசுடன் உடன் பட்டவாறு பிராந்திய விமான நிலையமாகத் தரமுயார்த்தி விமானப் போக்குவரத்தை விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென இந்திய அரசையும், இலங்கை அரசையும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
போதைப்பொருள் ஒழிப்பு, இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் விற்பனை, பாவனையை முற்றாக ஒழிக்க அரசும் காவல்துறையும் மக்கள் ஆதரவைப் பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது. இலங்கை அரசியல் அமைப்பில் 19 ஏ விதியை நாட்டின் சாபக்கேடு என்றும் இவ்விதியை நீக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு அறிவித்திருக்கிறார்.
நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள எவரும் ஜனாதிபதியின் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இம் மாநாட்டுச் சந்தர்ப்பத்தில் இந்நாட்டு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது விட்டாலும் ஒரு புது அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றம் ஏகமனதான தீர்மானத்தை எடுப்பதாலும் 19ஏ அரசமைப்பு விதியை மேலும் மேம்படுத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தான் சிறப்பானது என்று நம்புகிறோம்.
எனவே ஜனாதிபதி 19ஏ நாட்டின் சாபக்கேடு என்றும், நீக்க வேண்டுமென்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம், நிராகரிக்கின்றோம். 19ஏ அரசியல் திருத்தத்தைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டிப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கருதுகின்றோம்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment