பிரபாகரனின் ஆதிக்கத்தின் போது தேரர்களின் உதவியை நாடி நாங்கள் தமிழ் மக்களை பழிவாங்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அரசை ஆட்டுவிக்கும் பலம்கொண்டவராக இருந்த காலத்திலும் நாங்கள் தமிழர்களை தட்டிக்கழிக்கவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு இன்று (29) மாலை மஃமூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கம்பரலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாய்ந்தமருது, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 225 வசதி குறைந்த பொதுமக்களுக்கான மின்சார இணைப்பை பெறுவதற்கான ஆவணங்களை இன்று மக்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். பைருஸ், எம்.எஸ்.எம். நிசார், சட்டத்தரணி ரோஷன் அக்தர், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், நஸ்ரினா முர்ஷித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், உங்களின் துஆ மூலமே இன்று நாம் நிம்மதியாக இருக்கிறோம். சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருந்தும் மக்களின் ஒற்றுமைக்கு தமிழ் தலைமைகள் வழிசமைக்கவில்லை.
எம்.எஸ். காரியப்பர் செய்த பிரிப்பின் காரணமாக நான்காக இருந்த சபையை 1987 ஆம் ஆண்டு ஏ.ஆர்.எம். மன்சூர் இணைத்தார். பின்னர் பல சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சபையை முன்னர் இருந்தது போன்று நான்காக பிரிப்போம் என்பதே எமது மக்களுக்கு தேவையானது.
தமிழ் மக்களுக்கு பல நகரங்கள் இருந்தாலும் முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. இந்த நகரில் நாங்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இதனை தக்கவைக்க பல வருடங்களாக சிரமத்துடன் போராடுகிறேன்.
காலதாமதமாக இந்த விடயம் இருந்து வர காரணம் நாம் அனுபவ ரீதியாக பார்க்கும்போது, அண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னால் இருக்கும் விடயமே அதற்கு பிரதான காரணமாகும் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment