இராணுவம் தடுத்த வீட்டுத் திட்டம், அரச காணியிலேயே அமைக்கப்பட்டது - மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

இராணுவம் தடுத்த வீட்டுத் திட்டம், அரச காணியிலேயே அமைக்கப்பட்டது - மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிப்பு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு ஹீனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியவற்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வீடுகள் அமைக்கப்பட்டு வரும் காணியானது அரச காணி என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் தெரிவித்தார்.

வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ். வசந்தகுமார், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜே. நோயல் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ முசலி வீட்டுத்திட்டம் தொடர்பில் என்னுடன் உரையாடியுள்ளார். என்னுடைய அமைச்சின் அனுமதியை பெற்று குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்ளுகின்றேன்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் ஹீனை நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் 87 வீடுகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வீட்டுத் திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 87 வீடுகள் அமைப்பதற்கான காணிகளில் 65 வீடுகளுக்கான காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் (பேமீட்) வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் இருக்கின்றது. குறித்த காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.

வன வளத்திணைக்களத்திற்கு சொந்தமான எக்காணியும் அப்பகுதியில் இல்லை. அரச காணியிலே குறித்த வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலே குறித்த வீட்டுத் திட்டம் இடை நிறுத்தப்பட்டதாக அறிகின்றேன் என்றார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜே. நோயல் ஜெயச்சந்திரன் கூறுகையில், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்ட பணி இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக எமது தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஊடாக அறிந்தேன்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் சஜீத் பிரேமதாஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். உடனடியாக அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விடயத்தை அறியத் தந்ததோடு, மீண்டும் வீட்டுத் திட்ட பணிகளை ஆரம்பிக்க சகல அனுமதியும் வழங்கப்பட்டது.

நான் மன்னார் மாவட்ட இராணுவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கதைத்த போது முசலி பிரதேசத்தில் பல வீடுகள் அமைக்கப்பட்டு அவற்றில் மக்கள் இல்லாமல் காணப்படுகின்றது. அதன் காரணமாகவே இத்திட்டத்தை இடை நிறுத்தியதாக தெரிவித்தார். இந் நிலையில் மீண்டும் இராணுவம் அனுமதி வழங்கியது என்றார்.

மன்னார் நிருபர்

No comments:

Post a Comment