ரிஷாட் பதியுதீன் அமைச்சு பதவியிலிருந்து தானாக பதவி விலக வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

ரிஷாட் பதியுதீன் அமைச்சு பதவியிலிருந்து தானாக பதவி விலக வேண்டும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, “அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அந்த காரணங்கள் அவருக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலனவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களாகும்.

ஒருபுறம் கைது செய்தவர்களை விடுவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் கிடையாது. பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கூடாகவே இந்த விடயம் கையாளப்பட வேண்டும்.

அரசியல் செய்யக்கூடிய விடயம் இதுவல்ல. காரணம் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை தன்மை இல்லை.

ரிஷாட் பதியுதீன் அமைச்சு பதவியில் இருக்கும்போதோ அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்போதோ இது தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 

விசாரணைகள் நடத்தப்படும்போது அவர் தனது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துவாரா? அல்லது அவரது அரசியல் பலம் விசாரணைகளுக்கு தடையாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

எனவே ரிஷாட் பதியுதீன் அமைச்சு பதவியிலிருந்து தானாக விலக வேண்டும். அத்தோடு இந்த விசாரணைகளை பொலிஸாரிடம் வழங்கி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வெகு விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கமைய அராங்கமும் சட்டம் ஒழுங்கு பிரிவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லையென்றால் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment