சஹ்ரான் ஹாசிமுக்கு ஆதரவாகக் காணொளி வெளியிட்ட மௌலவி கைது - விளக்க மறியலில் வைக்க உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

சஹ்ரான் ஹாசிமுக்கு ஆதரவாகக் காணொளி வெளியிட்ட மௌலவி கைது - விளக்க மறியலில் வைக்க உத்தரவு

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு "அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்" என பிரார்த்தித்தும், "சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது" எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'முனாஜித் சீலானி' என்கிற பெயரில் ஃபேஸ்புக்கில் செயற்பட்டு வரும் முனாஜித் மௌலவி என்பவர், இலங்கையின் வட மாகாணம் செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் இலங்கையிலிருந்து முஸ்லிம்களை சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு 'உம்ரா' மற்றும் 'ஹஜ்' ஆகிய கடமைகளுக்கு வழிகாட்டியாக அழைத்துச் செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தினத் தாக்குதல் நடைபெற்ற நாளில் சவுதி அரேபியாவில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் முனாஜித் மௌலவி, அங்கிருந்தவாறே ஃபேஸ்புக் மூலமாக அந்தக் காணொளியை வெளியிட்டிருந்தார்.

அதில் முஸ்லிம்கள் மீது எதிரிகள் அடர்ந்தேறும்போது, யுத்தம் செய்வது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளதாகவும், "அதை எப்போது நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்கள்" என, முஸ்லிம்களை விழித்தும் கேள்வியெழுப்பியிருந்த முனாஜித் மௌலவி, "சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவாராக" என்றும் பிரார்த்தித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஐ.எஸ். அமைப்புடன் முஸ்லிம்களுக்கு உடன்பாடு கிடையாது என்றும், ஐ.எஸ். அமைப்பு எஹுதிகளினுடையது என்றும், அந்தக் காணொளியில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"பச்சைக் குழந்தைகளை இஸ்ரேலியர்கள் கொன்று குவிப்பதைக் கேள்வி கேட்காத ஐ.எஸ். அமைப்பினர், இலங்கைக்கு வந்து எங்களைப் பற்றிக் கேட்க வேண்டிய எந்தவித அவசியம் கிடையாது" என்றும் முனாஜித் மௌலவி அந்தக் காணொளியில் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, சவுதி அரேபியாவிலிருந்து இன்று சனிக்கிழமை இலங்கை திரும்பிய நிலையில் முனாஜித் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார்.

முனாஜித் மௌலவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் ஆஜர்செய்த போது, அவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment