நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று (31) முற்பகல் 10.15 அளவில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதில், அவருடன் மேலும் சில தேரர்களும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்க வேண்டும் என வலியுறுத்தியே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் குறித்த மூவருக்கும் தொடர்பு இருக்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் ஸாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் வழங்கியிருந்தார். இந்த நிலையிலேயே, அவர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
குறித்த மூவரையும் அவர்களது பதவியிலிருந்து நீக்கும் வரை தான், இப்போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment