ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுதலும் முக்கியமாகும் – ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுதலும் முக்கியமாகும் – ஜனாதிபதி

ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுதலும் முக்கியமாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கிடையே காணப்படும் பிரிவினை நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஒருபோதும் பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இன்று (10) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விமர்சனங்களைப் போன்றே சிறந்த சமூகமொன்றிற்கான கலந்துரையாடல்களும் கருத்தாய்வுகளும் முக்கியமானவையாகும் எனத் தெரிவித்தார்.

இன்று தனிப்பட்ட பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தமக்கெதிரான கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதனூடாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கோட்பாடுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாதென தெரிவித்தார்.

பல்வேறு அவதூறான கருத்துக்களை தமக்கு எதிராக தெரிவித்துவரும் நிலையிலும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பெரிதும் மதிக்கின்ற, அவற்றை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் தான் அமைதியாக இருந்தபோதிலும் மாற்றத்தினூடாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அவ்வாறு அமைதியாக இருக்காது என்பதை கடந்த சில தசாப்தங்களாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் அனுபவங்களினூடாக புரிந்துகொள்வது சிரமமானதல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆகையினால் ஊடகங்களின் பொறுப்பாக அமைய வேண்டியது, விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சிறந்த ஒழுக்கமான சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு பலமாக செயற்படுவதாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பற்றுறுதி வழங்குதல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதபதி, மீண்டும் அவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

சிறந்த ஊடகவியலாளர்கள் நால்வருக்கு “இலங்கை ஊடக அபிமானி” ஜனாதிபதி விருதுகள் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. சிரேஷ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச பத்திரிகை துறைக்காகவும் பிரபல ஊடகவியலாளர் கருணாரத்ன அமரசிங்க வானொலி ஊடகத்துறைக்காகவும் லூஷன் புலத்சிங்கள தொலைக்காட்சி ஊடகத் துறைக்காகவும், லக்ஷ்மன் ஜயவர்தன இணையத்தள துறைக்காகவும் இதன்போது ஜனாதிபதியினால் ஊடக அபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஊடக விருது விழாவுடன் இணைந்ததாக வெகுசன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட நூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வெகுசன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர மற்றும் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment