எஸ்.அஷ்ரப்கான்
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித்திட்டம் மிக நீண்ட காலமாக தொடர்ந்தேச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிவதாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார்.
இலக்கியன் முர்ஷித்தின் “நஞ்சுண்ட நிலவு” நூல் மீதான அனுபவப்பகிர்வு நேற்று 31.03.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, பேராளராக கலந்து கொண்டு அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து செயற்பட்ட நேரம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கான சதி அரங்கேற்றப்பட்டதென்று நான் நினைக்கின்றேன். இதற்குப் பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு புலனாய்வு சக்திகள் இருந்தன. இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் வீழ்ந்தனர். இயக்கங்களும் வீழ்ந்தன. இன்று வரை மீண்டெழுந்து நடமாட முடியாதவர்களாக இருக்கின்றோம்.
எங்கு பார்த்தாலும் சண்டை. பெரும்பான்மை என்கிற திமிர் இனங்களைப் பிரித்து வைத்திருக்கின்றது. இலங்கை முழுவதும் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் அவர்களிடம் இருக்கின்றது. வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் அவர்களின் அரசியலுக்கு இருக்கின்றது.
அம்பாறையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் முஸ்லிம்களுக்குள்ளது. இந்நிலையில், நாம் எல்லோரும் மொழியால் இணைவோம், கலையால் கலப்போம் என்கிற சரியான திட்டத்தை முன்வைத்து நிறுவன மயப்பட்ட வகையில் முன்னெடுக்கா விட்டால், மிக இலகுவாக அழிந்து விடுவோம். அந்த அந்த நிலங்களில் அந்த அந்த பெரும்பான்மைகளை அங்கீகரித்து, இன வேறுபாடுகளற்ற வகையில் அவரவர் அந்தஸ்துகளை ஏற்றுக்கொண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
தமிழை மொழியாகக் கொண்டு வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆபத்து காத்துக் கிடக்கின்றது. நாம் எதிரிகளையும், எதிரிகளின் சதிகளையும் அடையாளங்கண்டு வெற்றி கொள்வதற்கும், விலகுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் என்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாகவுள்ளது.
முஸ்லிம்களின் அரசியல் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானதாகவுள்ளது. சிங்கள அரசியல் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதேயொழிய அது சிங்களவர்களுக்கு எதிரானதாக இல்லை. அதே நேரம், சர்வதேச வலைப்பின்னல் என்பது முஸ்லிம்களுக்கு எதிராகவுள்ளது. முஸ்லிம்களுக்கெதிராக சர்வதேசம் முழுவதும் செயற்படுகின்ற மேற்குலக சக்திகளிடம் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லி கொள்வோர் அடிபட்டுப் போகின்றனர்.
ஆகவே, புதிய நடைமுறைகளை, புதிய அரசியல் வழிமுறைகளை கைககொள்வதற்கு, பழைய நடைமுறைகளை விட்டு மீண்டெழுந்து வருவதற்கு நாங்கள் இலக்கியத்தை, எழுத்துகளை, கவிதையை, கதைகளை, நாவல்களைப் பயன்படுத்த வேண்டும். சமத்துவமான வாழ்வுக்கு, அவரவர் அந்தஸ்துகளுடன் வாழ்வதற்கு மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். இதில் ஒரு பங்கை, பங்களிப்பை தம்பி முர்ஷித் செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். அதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சரியாகப் பிரச்சினைகளை அடையாளங்காண தவறினால் நாம் படுகுழியில் தான் விழ வேண்டும். உதாரணமாக, வில்பத்துப்பிரச்சினை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் இயற்கைக்கெதிரானவர்கள், பிரபஞ்சக் கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள், உலோகாய்தவாதிகள், வியாபாரிகள், கொள்ளைக்காரர்கள், வரிகளைச் சரியாகச் செலுத்தாதவர்கள், கள்ளப்பணம் சம்பாதிப்பவர்கள், போதை வியாபாரம் செய்பவர்கள் என்றெல்லாம் பிரசாரங்கள் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஒரு அங்கம் தான் வில்பத்து. ஆனால், அது உண்மையில் காடழிப்புப் பிரச்சினையல்ல. முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம்களையும், முஸ்லிம்களல்லாதவர்களைப் பயப்படுத்துகின்றனர். அதன் ஒரு அம்சம் தான் வில்பத்து. அச்சம் தான் மிகப்பெரிய இலவச முதலீடு. அந்த முதலீட்டை வியாபாரிகளும் பல் தேசியக்கம்பனிகளும் செய்கின்றன.
அச்சத்தை ஏற்படுத்துவது ஒரு கைத்தொழில் முயற்சி போலாகி விட்டது. குறிப்பாக, சிறும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் வியூகங்கள் வகுத்து சதிகள் புரிகின்றனர். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்களல்லாதவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தவே நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment