எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம் செயற்றிட்டம்” கடந்த 08.04.2019ம் திகதி திங்கட்கிழமை முதல் 12.04.2019ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதிநான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில், கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டத்தின் கீழ், நாசிவன்தீவு கிராமத்தில் மரம் நடுகை, வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், வாவிக்கரை துப்பரவு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முழு நாளும் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் வழிகாட்டலில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர் எச்.ரீ.டபிள்யூ.சதுரங்க, வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்டப் பொறியலாளர் எம்.துளசிதாசன், கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளர் எஸ்.ஏ.பைரூஸ், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரீ.துஸ்யந்தன், நாசிவந்தீவு சிவ வித்தியாலயத்தின் அதிபர் ரீ.ஜெயபிரதீபன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எச்.ஹப்னாஸ், நாசிவன்தீவு கிராம சேவை உத்தியோகத்தர் கே.ஜெகதீஸ்வரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜய கண்ணன், கரையோர திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஏ.கே.பர்ஹான் மற்றும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, நாசிவந்தீவு சிவ வித்தியாலயத்தில் ஐம்பது தென்னை மரங்கள் நாட்டப்பட்டதுடன், சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பத்து வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நாசிவன்தீவு கிராமத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு இரண்டு தென்னை மரங்கள் என்ற அடிப்படையில் ஐம்பது தென்னை மரங்கள் நாட்டப்பட்டதுடன், கோறளைப்பற்று பிரதேச சபையினால் பாடசாலைக்கு திண்மக்கழிவகற்றும் தொட்டிகள் ஒன்பதும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், கட்டுமுறிவு வாவியும் சுத்தம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment