ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 10, 2025

ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்காக நீதியமைச்சு ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிய பெயர் பட்டியலிலும், ஜனாதிபதி செயலகம் சிறைச்சாலை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்த பெயர் பட்டியலிலும் எச்.அத்துல திலகரத்ன என்ற கைதியின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நீதியமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (9) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சென்று சந்தித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்களை, நீதியமைச்சின் காரியாலயத்துக்குள் அழைத்து அவர்களுடன் சுமூகமான முறையில் கலந்துரையாடினார்.

இதன்போது சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதிகள் 'சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ளது என்று குறிப்பிட்டதுடன், ஒரு சில அதிகாரிகள் கைதிகளிடம் இலஞ்சம் பெற்று ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவிப்பதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறான மோசடிகளால் ஜனாதிபதி பொது மன்னிப்பு கிடைக்க வேண்டிய கைதிகள் பாதிக்கப்படுவதாகவும், அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும்' குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதியமைச்சர், 'இந்த கைது விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து அன்றையதினம் 06.30 மணியளவில் 15 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியின் அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டினேன். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி செயலகம் கடந்த 7 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்தது.

பொது மன்னிப்புக்காக நீதியமைச்சு ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்த பெயர் பட்டியலிலும், ஜனாதிபதி செயலகம் சிறைச்சாலை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்த பெயர் பட்டியலிலும் எச்.அத்துல திலகரத்ன என்ற கைதியின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதியின் உயர் அதிகாரம் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டு இந்த கைதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நீதியமைச்சு துரிதமாக செயற்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவது அடிப்படையற்றது. அரச உயர் அதிகாரிகளை அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைய பதவி இடைநிறுத்த முடியாது. அதற்கு முறையான வழிமுறைகள் உள்ளன. ஆகவே இந்த விடயத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை விசாரணைக்குட்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தயாரிக்கப்பட்டு அன்றையதினமே மும்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைவாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தி இந்த கைதி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment