இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை ஒன்றுதான் - முன்னாள் அமைச்சர் அதாவுல்லா - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை ஒன்றுதான் - முன்னாள் அமைச்சர் அதாவுல்லா

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை ஒன்றுதான். அதனை இல்லாதொழிக்க பலர் முயற்சிக்கிறார்கள். சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதே அதற்கான காரணமாகும் என்று முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

நாடறிந்த எழுத்தாளர் இலக்கியமாமணி மர்ஹூம் அ.ஸ. அப்துஸ்ஸமது நினைவாக அவரின் புதல்வன் அ.ஸ. அகமட் கியாஸ் எழுதிய 'எல்லாப் பூக்களுமே அழகுதான்' என்ற வாழ்வியலுக்கான அறிவியல் சிந்தனை நூலின் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மணிப்புலவர் மருதுர் ஏ மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழா நேற்று (2) அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.

விசேட அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் எ.எம். முஸாதிக் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றூபிவலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் 'ஆ.ஸா. இலக்கியமாமணி விருதுப்பட்டம்' வழங்கும் விருதுப்பட்டய தொட ர்நிகழ்வின் முதல் விருதை பொன் விழாக் கண்ட கவிஞர் அன்புடீன் பெற்றதோடு 'கவி ஒலி' என்ற பட்டத்தை முன்னாள் அமைச்சர் அதாவுல்லா வழங்கி வைத்தார்.

அங்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மேலும் பேசுகையில் இஸ்லாமிய தமிழிலக்கியத்தை இலக்கியப் பரப்பினில் அறிமுகப்படுத்திய பெருமை இந்த மண்ணின் பெருமகன் அ.ஸ. அப்துல்சமது என்ற இலக்கிய ஆளுமைக்கே சாரும். 
உலகில் எத்தனையோபேரது பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரது பேச்சு மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். அவரிடம் நான் தமிழ் சமயம் படித்திருக்கிறேன். அவரது முன்வைப்பென்பது அலாதியானது.

உலகின் மூத்த மொழியான தமிழைப் பேசுகின்றவர்களில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். முதன் முதலில் ஆதம் நபி பேசியதும் தமிழ் தானா என்ற ஆய்வும் தொடர்கிறது.

சிவனொளிபாத மலையை அனைத்து மதத்தினரும் மதிக்கிறார்கள். ஆனால் அந்தமலை யாருக்குச் சொந்தம் என்று கேட்டால் அனைவருக்கும்தான் எனப்பதில் வரும். இப்படிப்பல. இவைதான் உலகம் இலங்கையை திரும்பிப் பார்க்கவைத்த அம்சமெனலாம்.

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்குள்ள ஒரே பலம் ஜனாதிபதி முறைமை ஒன்றுதான். அதனை இல்லாதொழிக்க பலர் முயற்சிக்கிறார்கள். சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதே அதற்கான காரணமாகும்.

நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் கிடைத்த சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையைப் பலரும் அறியத் தவறியுள்ளனர். நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

சகாதேவராஜா

No comments:

Post a Comment