பத்து வருடங்களுக்கு முன் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கொடுக்க வேண்டும் என்று சொன்ன நீங்கள் இப்போது அச்சபை கொடுக்க கூடாது என சொல்வது ஏன் என எம்மை பார்த்து கேட்கிறார்கள் என உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அவர் தனது அறிக்கையில் மேலும், தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டில் தமிழ் ஈழத்துக்கான ஜனநாயக ரீதியிலான போராட்டம் ஆரம்பித்த போது தமிழீழம் கொடுக்கத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடே வடக்கு கிழக்கு முஸ்லிம்களிடம் இருந்தது. இப்போராட்டத்தில் மருதமுனை மசூர் மௌலானா போன்றோர் அடி கூட வாங்கினர்.
அது மட்டுமல்லாது அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெறாவிட்டாலும் நான் பெற்றுத்தருவேன் என தலைவர் அஷ்ரப் கூறினார்.
இறுதியில் என்ன நடந்தது. தமிழீழ போராட்டம் என்பது முஸ்லிம்களை கருவறுக்கவும் கொல்லவுமே குறிக்கோளாக கொண்டது என்பதை முஸ்லிம்கள் கண்ட போது தமிழீழம் கொடுக்க கூடாது என்ற நிலைக்கு மாறினார்கள். ஈழத்துக்காக போராடிய பிரபாகரனின் கழுத்தை அறுக்க கிடைத்தால் அதற்கும் தயங்க மாட்டேன் என தலைவர் சொல்லுமளவு நிலைமை மாறியது.
சாய்ந்தமருது சபை பற்றி அந்த ஊர் மக்கள் சிந்திக்காத போது ஒரு சில ஊடகவியலாளர்கள் இது பற்றி எழுதிய போது அவ்வூருக்கு சபை கொடுக்கத்தான் வேண்டும் என்பதில் நியாயம் கண்டோம். இதன்படி 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சாய்ந்தமருது இளைஞர்களையும் நிறுத்தி எமது கட்சிக்கு சாய்ந்தமருது மக்கள் பெரும்பாலாக வாக்களித்தால் அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறினோம்.
அப்படியிருந்தும் சாய்ந்தமருது மக்கள் எமது கட்சியை நிராகரித்து சாய்ந்தமருதுக்கு சபை தேவையில்லை என்ற கருத்து கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தனர். மக்களின் ஜனநாயக தீர்ப்பை நாம் ஏற்று சாய்ந்தமருதுக்கான சபை என்பதை கைவிட்டோம்.
இதன் பின் முஸ்லிம் காங்கிரஸ் 2011 தேர்தலில் சாய்ந்தமருதான் மேயரா கல்முனைக்குடியான் மேயரா என்ற பூதத்தை எழுப்பி இப்பிரதேச மக்களை பிரித்ததன் காரணமாக மீண்டும் சாய்ந்தமருதுக்கான கோஷம் அவ்வூரில் எழுந்தது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமுகமாக 2012ம் ஆண்டு கல்முனையை மூன்றாக பிரித்து தீர்வு வழங்கலாம் என ஊடக மாநாட்டில் உலமா கட்சி தெரிவித்தது.
அதனை சாய்ந்தமருது ஏற்று அவ்வாறான பிரிப்புக்கு முன் வந்திருந்தால் இப்பிரச்சினை எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் அதுவெல்லாம் வேண்டாம் முதலில் சாய்ந்தமருது சபையை தாருங்கள் என்ற கோஷம் எழுந்ததுடன் இதனை கல்முனைக்குடிக்கும் சாய்ந்தமருதுக்குமான ஊர் மோதலாக மாறியது.
அது மட்டுமல்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை கொடுக்க வேண்டும் என தமிழ் கூட்டமைப்பினர் பகிரங்கமாக தெரிவித்த போது இரண்டு பூனைகளின் அப்பச்சண்டையில் குரங்கு ஏன் நீதி செலுத்த முற்படுகிறது என தெரிந்து கொண்டோம்.
கல்முனையை இரண்டாக பிரித்து சாய்ந்தமருதுக்கு சபை கிடைத்தால் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனையை நாம் இழக்க வேண்டும் என பலர் எடுத்துக்கூறியும் அதெல்லாம் தெரியாது சபை வேண்டும் என சாய்ந்தமருது சின்னத்தனமாக அடம் பிடித்த போது அதற்கு ஆதரவாக கோடீஸ்வரன் எம்.பியை சாய்ந்தமருது பள்ளிவாயல் மாலையிட்டு வரவேற்ற போது இக்கோஷத்தின் பின்னால் டயஸ்போராவும் தமிழ் கூட்டமைப்பும் இருக்கிறது என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டது.
இவ்வாறு கல்முனையை அழிக்க முற்படும் தீய சக்திகளுக்கே சாய்ந்தமருது சபை கோரிக்கை சாதகமாகும் என்பதை புரிந்து கல்முனையை எக்காரணம் கொண்டு பிரிக்க முடியாது என்றும் சாய்ந்தமருதுக்கென தனியாக சபை கொடுக்க கூடாது என்றும் கூறுகிறோம்.
ஆகவே கல்முனை மாநகரில் உள்ள சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு மக்கள் அனைவரும் ஒன்று பட்டு பிரிபடாத கல்முனையை கட்டியெழுப்ப முன் வர வேண்டும் என உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment