யாழில் வாள்வெட்டு மற்றும் கோஷ்டி மோதல் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.
உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.
அந்தக் கும்பல் தப்பித்தவேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர்.
அதனடிப்படையில் வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உள்பட 5 பேர் சுன்னாகம் பொலிஸாரால் இரவு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 5 பேரும் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
வன்முறைச் சம்பவத்துக்கு திட்டமிடல், ஒழுங்கமைத்தல் என பின்னணியில் இருந்த பிரதான சந்தேகநபர் பிரதேச சபை உறுப்பினர். அவரது பின்னணியில் 7 பேர் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் மூவர் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பதை முன்வைத்தார். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.
வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி, விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள்கள் ஐவரையும் பிணையில் விடுவித்தார்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment