திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன வன்மையாக கண்டித்துள்ளார்.
மாலி தாக்குதலில் உயிரிழந்த இரு இராணுவ வீரர்களின் ஒருவர் பொலனறுவையை சேர்ந்தவராவார். அவரது பூதவுடல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி பொலனறுவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தினரை இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
அதனை தொடர்ந்து கிண்ணியா தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “சட்டவிரோத மணல் அகழ்வின் போதான கடற்படையினரின் தலையீட்டை தொடர்ந்து கிண்ணியாவில் ஏற்பட்ட பதற்ற நிலை பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் தலையீட்டுடன் தற்போது தணிந்துள்ளது.
ஆனால், கடற்படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கே கடற்படையினர் அங்கு சென்றிருந்தனர். மாறாக பிரதேச மக்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கு அல்ல.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான தகவலையடுத்தே கடற்படையினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால், இருவர் அச்சத்தில் கடலுக்குள் பாய்ந்ததை தொடர்ந்தே மக்களும் பதற்றமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வின்போது அங்கு சென்ற கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த இருவர் அச்சத்தில் கடலில் குதித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment