எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சந்திப்புக்கு அழைத்த போது நீ என்னுடைய இல்லத்திற்கு வா.. சந்தித்துக் கதைப்போம் என அழைத்திருக்கலாமே.
அதுமாத்திரமல்லாமல் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச எனில் அவரிடம் ஏன் அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத் திட்டம் தொடர வேண்டும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்?,
பிரதமரென்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து விட்டு அதனை வேறு விதமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் திசை திருப்ப முற்படுவது ஏன்? இதற்கெல்லாம் காரணம் கூட்டமைப்பின் எஜமானர்களான வல்லரசுகளே எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சராமரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச பிரதமராகவிருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். இவ்வாறு அவர் சந்தித்த பின்னர் கடும் விமர்சனங்கள் வெளிவந்தன.
சம்பந்தன் தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாப்பதற்கும், நாடாளுமன்றப் பிரதிக் குழுக்களின் உபதலைவராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனின் பதவியைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பாதுகாப்பதற்கும் தான் மகிந்த ராஜபக்சவை சம்பந்தன் நேரடியாகச் சந்தித்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இதன் உச்சக்கட்டமாக வல்லரசுகள் நீங்கள் எவ்வாறு மகிந்த ராஜபக்சவை சந்திப்பீர்கள்? எனக் கடுமையாக கூட்டமைப்பை எச்சரித்தார்கள்.
இதனையடுத்துத் தாங்கள் செய்த தவறுகளை ஏதோவொரு வகையில் நியாயப்படுத்த வேண்டுமென்பதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்ததாக ஊடகங்களுக்கு கருத்துக்கள் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளும், மகிந்த ராஜபக்சவை நேரடியாகச் சென்று சந்தித்ததும் தமிழ்மக்களின் நலன் கருதிய செயற்பாடுகளல்ல. இவையனைத்தும் அவர்களுடைய சுயநலன்களுக்கானது மட்டுமே.
கடந்த-27 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கருத்தின் ஊடாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியது.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரண்டு தரப்புக்களிலும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது வெறுமனவே முகங்களைப் பார்த்து நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். கொள்கை ரீதியாகவே முடிவெடுப்போம் எனக் கூறினார்கள். குறிப்பாகப் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்படும் பட்சத்திலும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துகின்ற விடயங்கள் தொடர்பாக வழங்கப்படும் வாக்குறுதிகளின் அடிப்படையிலும் தான் தங்களுடைய நடவடிக்கைகள் அமையுமெனக் கூறியிருந்தார்கள்.
இலங்கையில் இரண்டு பிரதமர்கள் காணப்படும் போக்குக் காணப்படுகின்றது. யார் சட்ட ரீதியான பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படப் போகின்றார் என்பதைத் தீர்மானிப்பதில் தங்களுக்கும் ஒரு பங்கிருக்கின்றது என்ற அடிப்படையில் தான் மேற்படி கருத்துக்களைக் கூறியிருந்தார்.
யார் தற்போதைய பிரதமர் என்பதில் தெளிவற்ற தன்மை காணப்படும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தான் இதுதொடர்பில் தீர்மானிக்கப் போகின்றது என்ற அடிப்படையால் தான் மேற்படி கருத்துக்களை நோக்க முடிகின்றது.
அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத் திட்டம் தொடர வேண்டும்இ ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழ்மக்களின் நலன்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்கின்ற நிலைப்பாடுகள் என்பதை நாங்களனைவரும் சரியான வகையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜெனிவாத் தீர்மானம் உள்ளக விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அந்தத் தீர்மானத்தைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் நிராகரித்து வந்தோம். அந்தத் தீர்மானத்தைக் கூட அரசாங்கத்திலுள்ள தரப்புக்கள் இதுவரை நடைமுறைப்படுத்தத் தயாராகவில்லாத சூழலே இருந்து வந்தது.
மகிந்த ராஜ்பக்ச, மைத்திரிபால சிறிசேன மட்டுமல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியக் கட்சியிலிருந்து வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த மங்கள சமரவீரவும், பிரதி வெளிவிவகார அமைச்சராகவிருந்த ஹர்சடி சில்வாவும் ஜெனிவாவுக்குச் சென்று வெளிநாட்டுக் கலப்புப் பொறிமுறைக்கு இடமில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்கள்.
புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஒற்றையாட்சி அரசியலமைப்புத் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு யார் வாக்குறுதி வழங்குகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் கூட்டமைப்பு தாம் செயற்படுகின்றார்கள் என்பது அவர்களின் நிபந்தனை மூலம் வெளிப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச தனக்குப் பெரும்பான்மையிருக்கின்றது என்ற நம்பிக்கையிலேயே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறான நிலையில் அவர் வழங்குகின்ற வாக்குறுதிகள் உண்மையான வாக்குறுதிகளாகவே காணப்படுமென நினைப்பது எங்களுடைய அறிவீனம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும், மைத்திரிபால சிறிசேனவிடமிருந்தும் பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றிருந்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களை ஏமாற்றுகின்றார்களெனக் கூறவில்லை.
மகிந்த ராஜபக்ச எவ்வாறான தரப்பு என்பது எம்மனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த மூன்றரை வருடங்களாக ரணில்- மைத்திரி அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியிருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியான இந்த வேளையில் மீண்டும் ரணில் தரப்பிடமிருந்தா நீங்கள் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள்?
அவ்வாறு வழங்கப்படும் வாக்குறுதிகள் மூலம் எவ்வாறான நன்மைகள் கிடைக்கப் போகின்றன? மீண்டும் எமது மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களை முட்டாளாக்கித் தங்களுடைய எஜமானர்களான வல்லரசுகள் விரும்பும் ஒரு தரப்பிற்கு ஆதரவு வழங்கி மீண்டும் ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்களெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறப் போகின்றதா?
கடந்த எழுபது வருடங்களாகத் தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்தது போதாதா?இ கடந்த மூன்றரை வருடங்களாக ரணில்- மைத்திரி அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றியது போதாதா?
தமிழ்மக்கள் இதுதொடர்பில் சரியாக விளங்கிக் கொண்டு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment