எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில்வைத்து கொலை செய்யப்பட்டார். சவூதி அரச குடும்பமே இந்த கொலையை செய்ததாக நம்பப்படுகின்றது.
இது தொடர்பாகவும், சவூதி அரச குடும்பத்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றியுமே இந்த கட்டுரைத்தொடர் எழுதப்பட்டு வருகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தினால் ஆறாவது தொடர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஈராக்கில் பேரழிவை தரக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா பொய் கூறி உலகை நம்பவைத்தது. இது பொய் என்று நன்றாக தெரிந்திருந்தும், அமெரிக்க படைகளை வரவழைத்து தனது நாட்டில் இராணுவ தளம் அமைத்து கொடுத்து பாரிய இராணுவ படை நடவடிக்கைகளுக்கு சவூதி அரசு முன்னின்றது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் இந்த பாரிய இராணுவ நடவடிக்கைக்கான நிதி உதவிகளை செய்ததுடன், புலனாய்வு தகவல்களையும் சவூதி அரசு வழங்கியது.
ஈராக்கில் சதாமை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரைக்கும் பல இலட்சம் இஸ்லாமிய மக்கள் ஈராக்கில் கொலை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆகும்.
ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்பு பல மதப்பிரிவுகள் எழுச்சி பெற்றது. ஒவ்வொரு பிரிவிலுமிருந்து ஆயுதக்குழுக்கள் அங்கு உருவாகியது. ஈராக் மக்கள் நின்மதியை இழந்தனர். இன்றும் முடிவில்லாத யுத்தத்தினால் இராக்கில் பேரழிவுகளும், அவலங்களும் தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சதாமின் ஆட்சியிலிருந்த முன்னாள் ஈராக் இரானுவத்தினர்களும், அல்குவைதா இயக்கத்தின் ஈராக் பிரிவினர்களும் சேர்ந்து இஸ்லாமிய அரசு (IS) என்ற இயக்கத்தின் பேரில் ஈராக்கிலும், சிரியாவிலும் குறிப்பிட்ட நிலப்பரப்பினை கைப்பேற்றி போர் செய்து வருகின்றார்கள்.
நூறுவீதம் இஸ்லாமியர்கள் வாழுகின்ற அரபு மண்ணில் இஸ்லாத்தின் எதிரிப்படைகளை நிலையூன்ற செய்வதனால் ஏற்படப்போகின்ற பின்விளைவுகளை பற்றி இந்த அரச குடும்பத்தினர்கள் கவலைப்படவில்லை.
இவர்களது சிந்தனைகள் எல்லாம் உலக முஸ்லிம்கள் மத்தியில் இரும்பு மனிதராக வலம் வந்த சதாம் ஹுசைனை அழிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கம் மட்டுமே அப்போது இருந்தது.
அதாவது தங்களைவிட பலமாகவும், தங்களுக்கு எஜமானராக இருக்கின்ற அமெரிக்காவுக்கு விரோதியாகவும் யாரெல்லாம் இருக்கின்றார்களோ, அவர்களை அழிப்பதன் மூலம் அமெரிக்க எஜமானுக்கு தங்களது விசுவாசத்தினை காண்பிக்க வேண்டிய தேவை இவர்களிடமுள்ளது.
அமெரிக்கா எங்கெல்லாம் தனது அராஜகத்தினை மேற்கொள்ளுகின்றதோ அங்கெல்லாம் சவூதி அரசு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவுக்கு உதவி செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டபோதும் சவூதி அரசு அமெரிக்காவுக்கு உதவி செய்தது.
இஸ்லாமிய நாடு ஒன்றின்மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதில் அழியப்போவது இஸ்லாமியர்கள் என்ற கவலை சவூதியிடம் இல்லை.
ஈரானை அரபு நாடுகளிலிருந்து தனிமைப்படுத்துவதற்கு “சீயா” என்ற பிரச்சாரமே உதவியது. ஆனால் சதாம் சுன்னி பிரிவை சேர்ந்தவர் என்பதனால் அவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியவில்லை.
அதனால்தான் பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள் இருப்பதனால் அருகில் உள்ள அரபு நாடுகளுக்கு சதாம் அச்சுறத்தலாக உள்ளார் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கனவே 1990 இல் சதாம் குவைத் நாட்டை ஆக்கிரமித்ததனால் அரபு நாடுகளின் பார்வையில் அவர் ஓர் ஆபத்தானவராகவே தென்பட்டார். அதனால் அமெரிக்காவைக்கொண்டு சதாமை அழிக்க வேண்டும் என்பதில் அரபு நாடுகள் ஒரே கொள்கையுடன் செயல்பட்டது.
சகோதர இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு அண்ணிய படைகளை அரபு மண்ணுக்கு வரவழைத்தது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்...
No comments:
Post a Comment