இன்றைய அரசியலின் யதார்த்த நிலை - பாகம் 3 - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

இன்றைய அரசியலின் யதார்த்த நிலை - பாகம் 3

இன்றைய பிரச்சினைக்கு பாராளுமன்றத் தேர்தல் தீர்வா?
தேர்தல் என்பது மக்கள் ஆணையைப் பெறுதல். இன்றையப் பிரச்சினைக்கு தேர்தலே தீர்வு; என்ற ஒரு கருத்தை மஹிந்த அணியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் முன்வைக்கின்றனர்.

அதேநேரம், நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை சிலர் பட்டியல்போட்டு ரணிலை ஏன் ஆதரிக்க வேண்டும்; என்ற கேள்வியைத் தொடுக்கின்றனர். மறுபுறம் மஹிந்த அரசில் நடந்த அட்டூழியங்களைப் பட்டியலிட்டு ரணிலை ஆதரிப்பதை அடுத்த தரப்பினர் நியாயப்படுத்துகின்றனர்.

இன்று தீர்மானிக்கப்படவேண்டியது ரணிலா? மஹிந்தவா? அல்லது இரண்டிற்கும் அப்பாற்பட்டதா? என்பதில் முதலில் நாம் தெளிவுகாணவேண்டும்.

ஒரு நாட்டின் முதன்மைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டமாகும்.அதுதான் சட்டங்களின் தாய். மக்கள் அந்த சட்டத்தினூடாகத்தான் பாராளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரத்தையும் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தையும் நீதித்துறைக்கு பாராளுமன்றத்தினூடாக நீதித்துறை அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறார்கள். இது சரத்து 4 மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை ஒவ்வொரு துறையும் எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று சொல்வதற்காகத்தான் மொத்த அரசியலமைப்பும் (170 இற்குமேற்பட்ட சரத்துக்கள்) இருக்கின்றன.

ஜனாதிபதி தனக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது; தான் எதையும் செய்வேன்; என்றால் பாராளுமன்றம் தனக்கு சட்டவாக்க அதிகாரம் இருக்கின்றது; தான் எதையும் செய்வேன் என்றால் நாடு என்ன ஆகும். அப்படியானால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒரு சரத்துப் போதும். அது சரத்து (4). ஆனால் ஜனாதிபதி அவ்வாறுதான் நடக்கின்றார். இந்தப்பின்னணியில்தான் இந்தத்தேர்தல் விவகாரத்தைப் பார்க்க வேண்டும்.

தனக்கு ஜனாதிபதி என்ற அடையாளத்தையும் அதிகாரத்தையும் தந்தது அரசியல் யாப்பு என்றால் அது விதித்த வரையறைக்குள்தான் அந்த அதிகாரத்தைப் பாவிக்கமுடியும். 4 1/2 வருடங்களுக்குள் பாராளுமன்றைக் கலைக்கமுடியாதென்று யாப்பு சொன்னால் கலைக்கமுடியாதுதான். அங்கு வேறு அரசியல் நியாங்களைக் கொண்டுவந்து அரசியலமைப்பை மீறமுடியாது.

ஆட்சியை இழந்தவர்களுக்கு ஆட்சிவேண்டுமென்பதற்காக, பாராளுமன்றக் கதிரைகளை இழந்தவர்களுக்கு அக்கதிரைகள் வேண்டுமென்பதற்காக ஒரு தேர்தல் நடந்த முடியாது. இங்கு பிரச்சினை தேர்தல் அல்ல, சட்ட மீறல்.

இன்று ஒரு சட்டமீறலை அனுமதித்தால் நாளை இந்த ஜனாதிபதி மாத்திரமல்ல, எதிர்கால ஜனாதிபதிகளும் அதே சட்டமீறல்களைச் செய்தால் நாட்டுநிலை என்னவாகும்? தேர்தலே கேலிக்கூத்தாக மாட்டாதா? தேர்தல் நடக்கிறது; என வைத்துக்கொண்டால், தேர்தல் முடிவு தனக்கு சாதகமில்லையெனில் ஜனாதிபதிக் கதிரையில் இருப்பவர் யாராயினும் அடுத்தநாள் அல்லது ஒரு சில மாதங்களில் மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டார்; இது தொடர்கதையாக மாட்டாது, என்பதற்கு என்ன நிச்சயம்? எனவே தேர்தலைப்பற்றி பேசுகின்றவர்கள் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டுதான் பேசுகின்றார்களா?

இன்று பெரும்பான்மை இருந்தாலும் ரணிலை தன்வாழ்நாளிலேயே நியமிக்க மாட்டேன்; என்று அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு கடுதாசிபோல் நினைத்துக்கொண்டு பேசுகிறார். தேர்தல் நடந்து பெரும்பான்மை பெறுகின்ற கட்சித்தலைவரை இந்த ஜனாதிபதிக்கோ, எதிர்கால ஜனாதிபதிக்கோ பிடிக்கவில்லை என்றால் அவரை பிரதமராக நியமிக்க மாட்டேன்; என்றால் நிலைமை என்னவாகும். தேர்தலும் நாங்கள் அளித்த வாக்குகளும் ஜோக்காக மாறாதா?

சிறுபான்மைக் கட்சிகள் ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து பேரம்பேசி “சமூகநலனுக்காக” ஒப்பந்தம்செய்து போட்டியிட்டு மக்களும் வாக்களித்து பெரும்பான்மை பெறுகிறது. (அவ்வாறு சமூக நலனுக்காக ஒப்பந்தம் செய்வார்களா? என்பது சமூகத்திற்குள் எழுப்பப்படவேண்டிய கேள்வி) அதன்தலைவரை பிரதமராக்க மாட்டேன்; என்றால், பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சித்தலைவரை பிரதமராக்கினால் நிலைமை என்ன?

அவர் இந்த சிறுபான்மை தனக்கு ஆதரவளிக்கவில்லை; என்று பழிவாங்க முற்பட்டால் என்ன நடக்கும்? சிந்திக்கின்றோமா? எனவே, இங்கு இருக்கின்ற பிரச்சினை தேர்தலுமல்ல, மஹிந்தவா? ரணிலா? என்பதுமல்ல. அப்பட்டமான சட்டமீறல்; என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அமைச்சர்கள் நியமனம்
19வது திருத்தத்தின் கீழ் பிரதமர் கூறுகின்றவர்களைத்தான் அமைச்சராக நியமிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு சொந்தமாக நியமிக்க அதிகாரம் இல்லை. ஆனாலும் நியமிப்பவர் அவரே. சிறுபான்மைக்கட்சிகள் கூட்டுச்சேர்ந்து ஒரு கட்சிவெற்றிபெற்றபின் அதன் தலைவரை பிரதமராக நியமித்துவிட்டு பிரதமர் சொல்பவர்களை அமைச்சர்களாக நியமிக்கமாட்டேன்; என்றால், அல்லது இந்த முஸ்லிம்கட்சித்தலைவர்கள் எனக்கெதிராக வேலைசெய்தவர்கள், அவர்களை நியமிக்க மாட்டேன்; என்றால் நம் சமூகம் அதைத் தாங்கிக்கிக்கொண்டாலும் நம்தலைவர்கள் தாங்குவார்களா? அதன் தொண்டர்கள்தான் தாங்குவார்களா?

முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு கட்சிக்கு ஒன்றுதான் கபினட் அமைச்சு. அதுவும் அதன் தலைவருக்கு மட்டும்தான். இரண்டு தந்தாலும் வாங்கமாட்டோம்; என்பது எழுதாத விதி. இரண்டு வேண்டாம் என்கின்ற நாம் நம் தலைவருக்கு அமைச்சு இல்லையென்றால் பொறுத்துக் கொள்வோமா?

இப்பொழுதுகூட, ரணில் இந்தப்போராட்டத்தில் வெற்றிபெறுவார். அமைச்சு, ராஜாங்க, பிரதி அமைச்சுக்கள் கிடைக்கும்; என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். ரணில் வெல்லவே மாட்டார் என்று தெரிந்தால் ............,?

இந்நிலையில் இந்த ஜனாதிபதியின் சட்டமீறல்களை தடுத்து நிறுத்தக்கூடாதா? அதை எவ்வாறு செய்வது? ஒரேயொரு வழி மீண்டும் ரணிலைப் பிரதமராக்குவது?

ஏன் சஜித்தை பிரதமராக்க முடியாதா? முடியாது. ஏனெனில் ரணிலுக்கு பெரும்பான்மை இருந்தாலும் ரணிலைப் பிரதமராக்கமாட்டேன் என்று அரசியலமைப்பை ஜனாதிபதி மீறும்போது சஜித்தைப் பிரதமராக்கினால் தனது சட்டமீறலில் ஜனாதிபதி வெற்றிபெற்றுவிடுவார். எனவே ரணிலே மீண்டும் பிரதமராக வேண்டும். ரணிலுக்காக அல்ல. ஜனாதிபதியின் சட்டமீறலை உடைத்தெறிவதற்காக.

இன்று த தே கூ ம் ஜே வி பியும் ஒரு புறம் நியாயத்திற்காகப் போராடினாலும் மறுபுறம் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலைச் செய்கிறார்கள். 113ஐக் காட்டுவது அவசியமில்லாதபோதும் அவ்வாறு காட்டினால் “ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மை” என்ற பதத்திற்கு வேலையில்லாமல் போய்விடும். அப்பொழுதும் மறுத்தால் நீதிமன்றம்சென்று உத்தரவைப் பெறமுடியும். ஆனால் இந்த இரு கட்சிகளும் ரணிலை ஆதரித்ததாக நினைத்து மக்கள் நம்மை நிராகரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கையொப்பம் வைக்க மறுக்கிறார்கள்.

தலைமைத்துவம் மக்களுக்குப் பின்னால் போகவேண்டிய சந்தர்ப்பமும் உண்டு. மக்களை தன்பின்னால் இழுக்கவேண்டிய சந்தர்ப்பமுமுண்டு. இது இரண்டாவதற்குரிய சந்தர்ப்பம். அதை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

தவறின், ரணில் வெற்றிபெறுவார் பதவிகளை மீண்டும்பெற என்று காத்திருப்பவர்கள் சலிப்படைந்து கரணமடித்துவிட்டால் ஜனாதிபதி தன் அத்துமீறலில் வெற்றிபெற்றுவிடுவார். உங்கள் போராட்டம் புஷ்வாணமாகிவிடும். எனவே, தாமதியதீர்கள்.

2015ம் ஆண்டு பிரதமரை நீக்கியது
2015ம் ஆண்டு அப்போதையப் பிரதமரை நீக்கி 44 வைத்திருந்த ரணிலைப் பிரதமராக நியமித்தபோது இன்று ஜனாநாயகத்திற்காக குரல் கொடுப்பவர்கள் எங்கே இருந்தார்கள்? என்றொரு கேள்வியை மஹிந்த தரப்பினர் முன்வைக்கின்றனர்.

அன்று 19 இருக்கவில்லை. ஜனாதிபதி பிரமரை வேண்டிய நேரம் எந்தக் காரணமுமில்லாமல் பிரதமரை நீக்கும் அதிகாரம் இருந்தது. இப்பொழுது அப்படி முடியாது. ஆனாலும் பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தால் நீக்கலாம்.

அதேநேரம், ஜனாதிபதியின் முடிவைக் கேள்விக்குட்படுத்துகின்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தது. பாராளுமன்றம் மூடப்படவுமில்லை, முடக்கப்படவுமில்லை. இன்று கேள்வியெழுப்புகின்றவர்கள் அன்று ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை. அதன்பொருள், பாராளுமன்றத்திற்கு அவர்மேல் நம்பிக்கை இருந்தது என்பதாகும்.

எனவே, இன்று நடப்பதுபோல் அன்று ஜனநாயக மீறல் இடம்பெறவில்லை, என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ( தேர்தலில் மேடைகளிலும் ரணிலைப் பிரதமராக்குவதுபற்றி பேசி மக்களது மறைமுக ஆணையும் பெறப்பட்டிருந்தது).

தொடரும்...
வை எல் எஸ் ஹமீட்

No comments:

Post a Comment