அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்படவேண்டும் என்ற பிரதான யோசனை உட்பட தேசிய முக்கியத்துவமுள்ள ஐந்து யோசனைகளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே விரிவுரையாளர்கள் தேசிய முக்கியத்துவம் பெற்ற ஐந்து யோசனைகளை பிரதமரிடம் முன்வைத்தனர்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் செய்யும் யோசனை கைவிடப்பட வேண்டும் என்பதே இதில் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது யோசனையாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த மத்திய வங்கி மோசடி தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் அதேவேளை அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென இரண்டாவது யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அரசாங்கத்தின் எவ்வித அனுமதியுமின்றி ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் நினைத்தபடி இணை அனுசரணை வழங்கிய 30/1 எனும் ஆலோசனை மற்றும் அதற்கு அடிப்படையாக இருந்த OISL ஆணையாளர் அறிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தவிர பிரதேச வேறுபாடின்றி தொல்பொருள்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நேரடியாக முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் முறையை நிறுத்தி அதனை கண்காணிக்கும் வகையில் அரசாங்கம் விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் பிரதமரிடம் சமர்ப்பித்த ஐந்து கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment