பொலிஸ் மா அதிபரை நீக்குவது தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையே தீர்மானம் எடுக்க வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசியலமைப்புப் பேரவைக்கு விரைவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுடன், பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அரசியலமைப்பு பேரவையே அவரை நீக்குவது குறித்து முடிவையும் எடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்றது.
இதில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்தார்.
நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்ததாகவும், நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டியதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத் தன்மை குறித்தே அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டின் குற்றச்செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது என ஜனாதிபதிகூறவில்லை. பரவலாக இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
பொலிஸ்மா அதிபரை நீக்குவது தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ள நிலையில், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் எடுப்பார் என்றும் கூறினார்.
அதேநேரம், பொலிஸ் மா அதிபரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைப் பெற்றுக் கொள்வது பற்றியோ அல்லது அவ்வாறான கடிதத்தைப் பெற்றுக்ெகாண்டு அவரை விலக்குவது பற்றியோ எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
அது மாத்திரமன்றி பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கே உள்ளது. எனவே அவரை நீக்கும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளது என்றார்.
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புப் பேரவைக்கான பிரதிநிதிகள் விரைவில் நியமிக்கப்படுவர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என இருவேறுபட்ட நிலைப்பாடுகள் இல்லை. அரசாங்கம் என்ற ரீதியில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment