கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் பாரிய தாக்கம் செலுத்துகின்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : காத்தான்குடியில் ஹக்கீம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் பாரிய தாக்கம் செலுத்துகின்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : காத்தான்குடியில் ஹக்கீம் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் போன்ற விவகாரங்களில் பாரிய தாக்கம் செலுத்துகின்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது எல்லோரும் பரவலாக எதிர் பார்க்கின்ற விடயமாகும் என கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் குறிப்பிட்டார்.

காத்தான்குடி நகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் அக் கட்சியினதும், இலங்கை தொழிலாளர் கட்சியினதும் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு அங்குள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) இரவு நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, காத்தான்குடி பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப புள்ளி என்பது எல்லோரும் அறிந்த விடயம். 1981ம் ஆண்டு கட்சியை மர்ஹூம் அகமது லெப்பையோடு சேர்ந்து எங்களுடைய பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆரம்பித்து வைத்த நாள் தொடக்கம் இந்த மண்ணுக்கு என்று விசேடமான பண்புகள் இருக்கின்றன. தலைவரின் காலம் தொடக்கம் இற்றை வரைக்கும் தொடர்ந்து மரச்சின்னத்தில் பாராளுமன்ற ஆசனத்தை அடைகின்ற ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.

அம்பாறை மாவட்டத்திலும் கூட ஆசனங்களை அதிகரித்துக் கொள்ளும் நப்பாசைகளில் வேறு சின்னங்களில் போட்டியிட்டிருக்கின்றோம். மற்றைய எல்லா மாவட்டங்களிலும் போட்டியிட்டு இருக்கின்றோம். ஆனால், மட்டகளப்பில் மாத்திரம் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெறுகின்ற வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பை மரச்சின்னத்தில் பெறுகின்ற அந்த சந்தர்ப்பத்தை இந்த மாவட்டத்தில் மாத்திரம்தான் அடைகின்றோம்.

காத்தான்குடிக்கு இருக்கின்ற முக்கியமான அம்சம் அனைவரும் அறிந்தது. ஆன்மீக ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவம், பொறியியல் போன்ற எல்லா துறைகளிலும் உச்சம் தொட்டவர்கள் இருக்கின்ற ஒரு பிரதேசம்.

இவ்வளவுக்கும் காத்தான்குடி நகரசபை 6.5 கிலோ சதுர மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு குறுகிய. நிலப் பிரதேசம் முழு நாட்டிலும் ஆகக்கூடிய குடிசனச் செறிவு இருக்கின்ற ஒரு பிரதேசம். அந்த பிரதேசத்தை ஆளுகை செய்கின்ற ஓர்அந்தஸ்த்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்துக்கு தந்திருப்பதற்காக உங்கள் எல்லோருக்கும் நான் தலைவர் என்ற அடிப்படையில் நன்றியறிதலைத் தெரிவித்து கொள்கின்றேன்.

மட்டக்களப்புக்கு இன்னும் பல சிறப்புக்கள் இருக்கின்றன. வெளியிடங்களில் இருந்து வரும் அரசியல் வாதிகள் மட்டக்களப்பு முஸ்லிம்களின் மேல் நம்பிக்கை வைத்தே மட்டக்களப்புக்கு வருகை தருகின்றனர். முஸ்லிம்களின் அடையாளச் சின்னம் இந்த மாவட்டம். இந்த காத்தான்குடி மண்தான் அதன் இருப்புக்கான காரணம். இதற்கென்று ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது. கட்சியை இந்த மாவட்டத்தில் நாங்கள் இன்னும் பலமாக இந்த முழு நாட்டுக்கும் என்று வியாபிக்க வேண்டும்.

கொழும்பு மாநகரசபை, களுத்துறை மாநகர சபை, குருணாகல் மாநகரசபை, புத்தளம் மாநகரசபை, திருகோணமலை மாநகரசபை என்று மாநகரசபை பலவற்றில் நாங்கள் வட்டாரங்களை வென்றிருக்கின்றோம். இவ்வாறு மாநகர சபைகளில் நேரடியாக வட்டாரங்களை வெல்வது என்பது சாமானியமானதல்ல. அதுவும் மரச்சின்னத்தில் நாம் வெற்றியை அடைகிறோம் என்பது எமது பெருமிதத்தை உச்ச நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதே நேரம் ஆட்சியை தீர்மானிக்கும் அந்தஸ்த்தை நாம் பெற்றிருக்கின்றோம் என்பது எங்களுக்கு இந்த தேர்தலில் புதிய தோர் உற்சாகத்தைத் தந்திருக்கின்றது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த கட்சி பல உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற போது, எந்த போட்டியும் பிரச்சினையும் இல்லாமல் நேரடியாகவே கட்சியாகவே தவிசாளரை நியமிக்கும் ஒரு பெரிய அந்தஸ்த்தையும் வாய்ப்பையும் இந்த கட்சிக்கு இந்த ஊர் மக்கள் வழங்கியதற்காக மீண்டும் மீண்டும் எனது நன்றியறிதலை தெரிவித்து கொள்கின்றேன்.

என்னைப் பொறுத்த மட்டில், இந்த கட்சியை ஆரம்பித்த நாளில் இருந்து நாங்கள் அரசியல் நடவடிக்கைளைத் தொடங்குகின்ற போது எங்களின் மறைந்த தலைவரோடு மர்ஹூம் சேகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவருடன் துஆப் பிரார்த்தனை செய்து விட்டுதான் நாங்கள் ஆரம்பித்துச் செல்வோம். நியமனப்பத்திரம் கையளிக்கும் முன் இதை நாங்கள் சம்பிரதாயமாகவே மேற்கொண்டு வந்தோம். இப்படி காத்தான்குடியை மையப்படுத்தி இந்த அரசியல் நடவடிக்கைகள் இருந்தது.

அண்மையில், எனது இல்லத்தில் பிரதித் தலைவர் ஹிஸ்புல்லாஹ், செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை அழைத்து, உள்ளுராட்சி சபைகளின் ஆட்சிகளை கைப்பற்றுவதற்கான திட்டமிடல் சம்பந்தமாக முக்கியமான சில திட்டங்களை வகுக்கின்ற விடயத்தை ஆராய்ந்தோம். நாங்கள் தேர்தல் முடிந்த நாள் தொட்டு இந்த விவகாரத்தில் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம். சகோதரர் ஹிஸ்புல்லாவின் பங்களிப்புடன் இந்த மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள எல்லா சபைகளிலும் ஆட்சியை கைபற்றுவதற்கான ஒரு முயற்சியின் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கின்றோம். எனவே இந்த முயற்சியில் சகோதரர் நளீமும் சகோதரர் ஹிஸ்புல்லாவுக்கு பக்கத் துணையாக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு யாரும் வந்து ஆட்சி அமைக்க முடியாத ஒரு நிலைவரத்தை உருவாக்குதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம். இறைவனின் நாட்டம் அதுவாக இருக்கும் என்பதில் நாங்கள் பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றோம்.

ஏனைய பிரதேசங்களிலும் நாளை தெரிவாகி இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களையும் அழைத்திருக்கின்றோம். உள்வீட்டு பிரச்சினைகளை பேசுகின்ற அதே வேளைமாற்று கட்சிகளுடனும் ஆட்சியை கைபற்றுவது சம்பந்தமான வியூகங்களை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்த இருக்கின்றோம். அதிலும் ஹிஸ்புல்லாஹ்வும் கலந்து கொண்டு எனக்கு பக்க துணையாக இருந்து திட்டமிடல்களை செய்வதற்கு பூரண ஒத்துழைப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டம் உட்பட நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்களோடு கூட தொலைபேசியில் பேசி உடன்பாடுகளைக் காலம் தாழ்த்தாமல் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

மீள் வருகைக்கு பின்பு இந்த கட்சியை நெறிப்படுத்துவதில், கட்டு கோப்பாக கொண்டு செல்வதில், இன்னும் பலப்படுத்துவதில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் பங்களிப்பு மிகவும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கின்றது.

அதே போல ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அண்மையில் ராஜிநாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் நளீம், எமது செயலாளர், பிரதி தேசிய அமைப்பாளர், பிரதி செயலாளர், அம்பாறை மாவட்டச் செயலாளர் உட்பட எல்லோரும் 24 மணி நேரமும் இந்த உள்ளுராட்சி சபைகளில் எங்களின் ஆட்சிகளை அமைத்து கொள்வதற்கான முயற்சியில் எனக்கு பக்கத் துணையாக நிறைய வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தலின் முடிவுகளை கட்சியின் அடுத்த கட்ட வெற்றிக்கு ஒரு படிகல்லாக அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் போன்ற விவகாரங்களில் மிக பெரும் தாக்கம் செலுத்துகின்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது எல்லோரும் பரவலாக எதிர் பார்க்கின்ற விடயமாகும். அதை இன்னும் பலமாகச் சாத்தியப்படுத்துகின்ற விவகாரங்களில் நாங்கள் இன்னும் உறுதியோடும் மனத்திடத்தோடும் ஈடுபடுவதற்கு இறைவன் துணை புரிவானாக செய்வானாக என்றார்.

No comments:

Post a Comment