(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி காரணமாக தொழிற்சாலைகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளன. எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் சீனி உற்பத்தி தொழில் நீண்ட காலமாக தேசிய வணிகத் தொழிலாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை நம்பி கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் ஈட்டுகின்றன.
தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தேசிய சீனி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இந்தத் தொழிற்சாலைகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன.
தேசிய சீனி உற்பத்தியின் தற்போதைய நிலைமை, இறக்குமதி வரிக் கொள்கைகள் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன. அதன் பிரகாரம் இது குறித்து அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.
இலங்கையில் தற்போது இயங்கும் லங்கா சீனி உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான சீனி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும் ? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் அளவு யாதென்பதையும் ? நாட்டின் வருடாந்த சீனித் தேவையில் இந்த உற்பத்தி எத்தனை சதவீதத்தை குறிக்கிறது என்பதையும் குறிப்பிட முடியுமா?
இதன் பிரகாரம், ஆண்டுதோறும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனியின் அளவு யாது? இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி யாது ? அது எவ்வளவு ?
தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி எவ்வளவு ? இறக்குமதி செய்யப்படும் சீனி வட் வரி விதிப்பில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு வட் வரி விதிப்பிற்கு உட்படுவதற்கும் ஏதுவான காரணம் யாது ?
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 50 ரூபா அறவிடப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு 18 வீத பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செலவு 237 ரூபா ஆக அமைந்து காணப்படுகிறது. இது சந்தையில் 175 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதனால் பாரிய நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தேசிய சீனி உற்பத்திக்கு ஏன் தொடர்ந்தும் 18 வீத வரி அறிவிட வேண்டும் என கேட்கிறோம்.
லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றதா ?
இந்த தொழிற்சாலைகள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக கொண்டுவர தற்சமயம் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா ? இதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் என்ன ?
எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, கல்ஓயா 17 பில்லியன் ரூபா, எதிமலே 7 பில்லியன் ரூபா, பெல்வத்த 10 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நஷ்டமடைந்துள்ளன.
செவனகல சீனி தொழிற்சாலையை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். இந்த நட்டங்கள் தொடர்பில் அரசாங்க தரவுகளை சமர்ப்பிக்க முடியுமா? இந்தத் தொழிற்சாலைகளை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டம் என்ன?
சீனி உற்பத்தியின் துணைப் பொருளான எத்தனோல் விற்பனையில் நஷ்டம் ஏற்பட காரணம் என்ன ? இவ்வாறு நஷ்டம் ஏற்படுவதை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இன்று ஒரு லீட்டர் எத்தனோல் 450 ருபா முதல் 475 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தி செலவு 628 ரூபா. 750 ரூபா ஆக அமைந்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலை 800 ரூபா ஆக அமைந்து காணப்பட வேண்டும். கடந்த ஆண்டு விற்பனை விலை 1,500 ருபா ஆக அமைந்து காணப்பட்டது.
எத்தனோல் மீது கவனம் செலுத்தவில்லையாயினும், அது ஒட்டு மொத்த உற்பத்தி செயல்பாட்டில் முக்கியமானதாக அமைந்து காணப்படுகிறது. ஊவா வெல்லஸ்ஸ மக்களின் வாழ்க்கையுடன் இது தொடர்புடையதாகும்.
மேலும், சீனி இலாபத்தில் 30 வீதம் வரியாக அறவிடப்படுகிறது. எத்தனோல் இலாபத்தில் 45 வீத வரியாக அறிவிடப்படுகிறது. மேலும், ஒரு மெட்ரிக் டொன் மொலாசஸுக்கும் 10,000 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதனால் இறுதியில் விவசாயிகளே பாதிக்கப்படுகின்றனர்.
எனவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதன் மூலம் லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் எதிர்நோக்கும் நஷ்டத்தை குறைத்துக் கொள்ள முடியும் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா?
எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால் ஏன் ? என கேட்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment