பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுடைய பிரச்சனைகளை முன்வைக்கும் வகையிலும் மாவட்ட மட்ட வலையமைப்பொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ளது.
பாவனைப் பொருள்களின் அளவு, நிறை மற்றும் தரம் தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற இந்த கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு ஊடகங்கள் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்தல், பொருள்கள தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளல், மட்டக்களப்பு பிரதான சந்தையில் டிஜிடல் அமைப்பில் விலைப்பட்டியலொன்றை நிறுவுதல், நிறையிடல் உபகரணம் ஒன்றை அமைப்பதன் மூலம் பாவனையாளர்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தல், விற்பனையாளர்களைத் தெளிவூட்டல், சிறந்த வர்த்தக நிறுவனங்களைக் கௌரவித்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மேலதிக அரசாங்க அதிபர் - காணி திருமதி ந.முகுந்தன், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உணவு மற்றும் மருந்து பொறுப்பதிகாரி, அளவைகள் மற்றும் நிறுவைகள் திணைக்களப் பொறுப்பதிகாரி, பாவனையாளர் அலுவலக பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாவனைப் பொருள்களின் அளவு, நிறை. மற்றும் தரம் என்பன மாவட்டத்தினுள்ளே இடத்துக்கிடம்மாறுபடுவதாகவம், இதனை ஒரு முறைமைக்குள் கொண்டு வருதல் வேண்டும். பாவனையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உத்தியோகத்தர்கள் குழுவாகச் செயற்படுதல், மருந்தகங்களில் ஒருவித போதை தரக்கூடிய மருந்து வில்லைகளின் விற்பனை, கடைகளில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களின் அடிப்படை வசதிகள், கட்டாக்காலி மாடுகளின் பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க அதிபர் இதன்போது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அத்துடன், வீதியோர வியாபாரிகள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்தல், அதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுதல், வியாபார நிலையங்களில் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்து மட்டக்களப்பு மாநகர முதல்வர் கருத்துக்களை முன்வைத்தார். இதுபோன்று கூட்டத்தில் பங்கு பற்றியவர்களின் கருத்துகளுக்கமைவாகவே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment