தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மகிந்த காலத்தில் செய்தவர் இப்போதைய ஜனாதிபதி மைத்திரியே - மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மகிந்த காலத்தில் செய்தவர் இப்போதைய ஜனாதிபதி மைத்திரியே - மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமையடையக் கூடிய ஒரு விடயமல்ல. காரணம் அத்தனை சிங்களக் குடியேற்றங்களையும் செய்தவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவேயாகும் என வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்துத் தொடர்பாக து.ரவிகரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் கருத்து தமிழ் மக்கள் பெருமை அடையக்கூடிய அல்லது மகிழ்ச்சியடையக்கூடிய கருத்தல்ல.

அதற்கு காரணங்கள் உள்ளன. இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ‘கிபுல் ஓயா’ திட்டம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் வெள்ளைக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது.

அதே போல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இவ்வாறு பல சம்பவங்களை அடுக்கிக் கூறலாம்.

மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விழுங்கப்பட்டன.

இதே போல் 1988ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 09ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதனை செய்தவர் வேறு யாருமல்ல. இப்போதைய ஜனாதிபதியும் அப்போதைய மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே. இதன் ஊடாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும், வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டது.

இரு போகங்களும் நெற் செய்கை நடந்த பல ஆயிரக் கணக்கான விவசாய நிலங்கள் சிங்கள மக்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. இதனால் அந்த நிலங்களுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, தான் அடாத்தாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்றிய சிங்கள மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்புக்கான காணி உத்தரவுப் பத்திரங்களை இன்று வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

தமிழர் நிலங்களில் திட்டமிட்டு சிங்கள மக்களைக் குடியேற்றுவதில் ஜனாதிபதி விருப்பமற்றவர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அன்றிருந்த நிர்ப்பந்தங்களினால் தான் குடியேற்றங்களை அவர் செய்தார் என யாரும் கூறக்கூடும். அப்படியே இருந்தாலும் இன்று சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாகவும், மகாவலி அபிவிரு த்தி அமைச்சராகவும் இருக்கும் அவர் அடாத்தாகக் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு எதற்காக காணி உத்தரவுப் பத்திரங்களை வழங்க வேண்டும்?

இன்று நாங்கள் சிங்கள மக்களை குடியேற்றவில்லை. எனக் கூறுவதன் ஊடாக முன்னர் சிங்கள மக்கள் அடாத்தாகத் தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து குடியேற்றப்பட்டார்கள் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் அரசாங்கம் முன்பு நடைபெற்ற அந்த தவறை நிவர்த்தி செய்துள்ளதா? எதனையும் செய்யாமல் நாங்கள் குடியேற்றவில்லை என கூறுவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடாது.

ஆகவே அமைச்சர் ராஜித சேனாரத்ன அல்லது அரசாங்கத்தின் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்கள் பெருமைப்படவோ அல்லது மகிழ்ச்சியடையவோ முடியாது. இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களை மந்தைகளாக நினைத்து கூறப்படும் கருத்துக்கள் மட்டுமேயாகும்.இதனால் தமிழ் மக்களிடம் எரிச்சலும், கோபமும் உண்டாகுமே தவிர யாரையும் தூயவர்களாக எண்ணவைக்காது என்றார்.

No comments:

Post a Comment