நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள முழுமையான சுதந்திரத்தைப் பயன்படுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இருக்காது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
27/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மேலும் குறிப்பிட்டதாவது,
நாளை (இன்று) விடுமுறை நாளல்ல. மாணவர்கள் ,அரச ஊழியர்கள் எனப் பலரும் கொழும்புக்கு வருவார்கள். அவர்களது போக்குவரத்து வசதிகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அதற்காக பஸ் போக்குவரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம் எம்.பிகளுக்கு இடையூறின்றிக் கொழும்புக்கு வரவும் திரும்பிச் செல்லவும் இடையூறு செய்யப்படுமானால், அதற்கு எதிராக பொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
மைத்திரி அரசில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாலேயே கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்துள்ளது. இவர்கள் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு அவற்றை சுற்றிவளைப்பதாகவும் எச்சரித்துள்ளார்கள். நாம் கொழும்பு வரவேண்டாம் என்று தடுக்கவில்லை.
ஆனால், மதுக்கடைகளுக்கு நாளை (இன்று) அமோக வியாபாரமிருக்கும். எக்னலிகொடவுக்கு நடந்தது போலவோ, லசந்தவை சுட்டது போன்றோ கீத் நொயாருக்கோ உபாலி தென்னகோனுக்கோ நடந்தது போன்று இன்று எதுவும் நடக்காது.
நாம் வழங்கியுள்ள முழுச் சுதந்திரத்தை பயன்படுத்தி நாளை (இன்று) கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும். ஆனால், உங்களுக்குப் பெரிய கூட்டத்தைத் திரட்ட முடியாமல் போனால் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தாதீர்கள்.
பஸ்களை கட்டுப்படுத்த 10 நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று மாத்திரமே மத்திய அரசின் கீழ் இருக்கிறது. ஏனையவை மாகாண சபைகளின் கீழே செயற்படுகின்றன. உங்களிடையே ஒற்றுமை இல்லாதிருப்பதற்கு எமக்கு எதுவும் செய்ய முடியாது.
நாமல் ராஜபக்ஷவை வாழ்த்துகிறோம். தான் தலைவர் என்ற கோதாவில் அவரும் பேசினார். நான் இரு தடவைகள் பதில் வழங்கியிருந்தாலும் அவருக்காக மீண்டும் பதிலளிக்கிறேன்.
எதிரணி ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை டலஸ் அலகப்பெரும முன்வைத்துள்ளார். ஒரே விடயம் தொடர்பில் இரு தடவை பேச இடமளிக்க முடியாது. 27/2 இன் கீழ் இது பற்றி பேசப்பட்டதால் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த முடியாது என்றார்.
தினகரன்
No comments:
Post a Comment