மாநகர எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அதேவேளை மாநகர சபையின் வியாபார அனுமதியையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மக்களின் நண்மை கருதி மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படத் தவறும் நிதி நிறுவனங்களின் வியாபார அனுமதி மாநகர சபையினால் இரத்துச் செய்யப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (01) இடம்பெற்ற நுண்கடன் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல் நிகழ்வில் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை விழித்து கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் நுண்கடன் தொடர்பான குழுவின் ஏற்பாட்டில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்களான இரா.அசோக், ஜேம்ஸ் திலிப்குமார், அ.கிருரஜன், தயாளகுமாரன் கௌரி, சுலக்ஷனா, திவாகரன் மற்றும் மாநகர எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சமகாலத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நுண்கடன் பிரச்சினைகளால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் கலாசார சீரழிவுகளை மட்டுப்படுத்தும் நோக்கிலும் நுண்கடன்களை வளங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள முறன்பாடுகளை தீர்க்கும் நோக்கிலும் இக்கூட்டத்தின் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.
மாநகர சபையின் எல்லைக்குள் இயங்கும் நுண்கடன் நிறுவனங்கள் என்னென்ன காரணங்களுக்காக கடன் வழங்குகின்றன? கடன் வழங்க கோரப்படும் ஆவணங்கள் எவை? அந்தக் கடன்களுக்கான வட்டி வீதம் என்ன? மீழப்பெற்றுக்கொள்ள நிறுவனம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன? எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் பொது மக்களால், நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மாநகரசபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முதல்வர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாநகர எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அதேவேளை மாநகர சபையின் வியாபார அனுமதியையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாத நிறுவனங்கள் தாமாகவே வெளியேறிச் செல்ல வேண்டும். கடன் வழங்குவதற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் தொழில், வருமானம், தங்கி வாழ்வோர் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி, நிதி நிறுவனங்களுக்காக களத்தில் செயற்படும் ஊழியர்கள் அதெற்கென பயிற்றப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று அறவீடு செய்ய முடியாது. விண்ணப்பப் படிவங்கள் தமிழில் இருக்க வேண்டும், அது பொருள் விளங்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு படித்தும் காட்டப்பட வேண்டும். ஒரே வட்டி வீதத்தின் கீழ் இயங்க அனைத்து நுண்கடன் நிறுவனங்களும் முன்வர வேண்டும்,
நுண்கடன் தொடர்பான அடுத்தடுத்த கூட்டங்களுக்கு நுண்கடன் நிதி நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் சமுகமளிக்க வேண்டும். மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் இவ்வகையான தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படத் தவறும் நிறுவனங்களின் வியாபார அனுமதி மாநகர சபையால் இரத்துச் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment