கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொது வெளியில் பகிர்வதும் அப்பட்டமான ஊடகங்களை அச்சுறுத்தி மிரட்டுவதுடனூடக சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்பதை யாழ்.ஊடக அமையம் வன்மையாகப் பதிவு செய்கின்றது.
நேற்றைய தினமான சனிக்கிழமை யாழ்.நகரில் வைத்து பத்திற்கும் குறைவான நபர்களைக் கொண்ட சிறு அணியொன்று வலம்புரிப் பத்திரிகையின் நேற்றைய பதிப்பின் மாதிரியினை தீக்கிரையாக்கியுள்ளது.
யுத்தம் அதனால் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் மாறி மீண்டும் நட்புறவு பூக்கள் பூத்து விடுமென்ற நம்பிக்கையினை மத அடையாளங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் இத்தகைய செயல்கள் சிதைவடையச் செய்துவிடுமென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் என யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.
இதுவொரு சிறு குழுவின் செயற்பாடென பலரும் வியாக்கியானம் செய்தாலும், இத்தகைய போக்குகள் மீண்டும் ஆராக்கியான சூழலொன்று உருவாகி வருதை நிச்சயமாக பாதிக்கவே செய்யுமெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமது மலின அரசியலுக்கு அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்ற ஊடகங்களை கேலிக்குரியதாக்கும் எத்தகைய நடவடிக்கைகளினையும் யாழ்.ஊடக அமையம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை.
தாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை விழுங்கி தனி நபர் அரசியல் நலன்கருதி வாந்தியெடுக்கும் சாதனங்களாக ஊடகங்களை இத்தகைய தீமூட்டல்களின் பின்னாலுள்ள நபர்கள் கருதுவார்களெனில், அது அவர்களது அறியாமையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஊடகமொன்று வெளியிடும் கருத்திற்கு தமது தரப்பு கருத்தை ஊடகப்பரப்பில் வெளிப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளுக்கு கடினமானதொன்றல்ல. அது அவர்களுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதொன்றுமல்ல.
தமக்குள்ள சிறப்புரிமைகளின் கீழ் பதுங்கிக்கொண்டு சேறுபூசல்களை மேற்கொள்வதும், அதனை கேள்விக்குள்ளாக்குமிடத்து கும்பலாக கடித்துக்குதறுவதும் தமிழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதியவிடயமல்ல. அது தொன்று தொட்டு தொடரும் பாரம்பரியமாகவேயிருந்து வருகின்றது.
வெறுமனே இன நல்லிணக்கம், மத நல்லிண்ணக்கம் பற்றி கூடியிருந்து கதைப்பதனை விடுத்து, இத்தகைய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனத்திலெடுக்க மதத்தலைவர்கள், சமூக பெரியோர் மற்றும் புத்திஜீவிகள் அனைவரையும் யாழ்.ஊடக அமையம் வேண்டி நிற்கின்றது.
பாறுக் சிஹான்
No comments:
Post a Comment