இலங்கையை பன்னாட்டு நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டுமென்பதுடன், சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வட மாகாண சபையில் பிரேரணை ஒன்று கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 130வது அமர்வு நேற்று (30) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும், நிரந்தர அரசியல் தீர்வின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் 5 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரேரணையினை சிவாஜிலிங்கம் சபையில் முன்மொழிந்தார்.
சபையில் விவாதங்கள் இன்றி ஏக மனதாக அங்கீகரிக்ப்பட்டது. இருந்தும் பிரேரணையில் உள்ளடக்கிய விடயங்களில் காணப்படும் மொழிநடைகளை மாற்றம் செய்வதற்காக 5பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
குழுவினர் முறைப்படியாக பிரேரணைமொழிநடைகளை மாற்றம் செய்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வின் போது, அந்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்படுமென அவைத்தலைவர் சபையில் அறிவித்தார்.
அவைத்தலைவரின் அறிவித்தலை பிரேரணை முன்மொழிந்த உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் அடுத்த அமர்வில் இந்த பிரேணை தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.
அவ்வாறு நிறைவேறப்படவுள்ள பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென அவைத்தலைவர் சபையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment