கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சை 2018 இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை, 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) இப்பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (06) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள 311 இணைப்பு மத்திய நிலையங்களின் ஊடாக 2,268 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு நேர காலத்துடன் வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் தங்களது பரீட்சை மண்டபத்திற்கு வந்து சேருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சார்த்திகள், தொலைபேசிகள், உயர் தொழில்நுட்பத்துடனான கைக்கடிகாரங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவது அதனை பரீட்சை மண்டபத்திற்கு கொண்டு வருவது போன்றன தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோர், அதற்கு துணை புரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர், சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் உடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment