பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காணப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"எல்.ரி.ரி.ஈ தொடர்ந்தும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்க முடிந்துள்ளது" என பிரெசெல்சில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்தார்.
உறுதியாகக் கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொழும்பில் உள்ள முகவர் அமைப்புக்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினரிடமிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரித்த அறிக்கையைக் கொண்டு இந்த முடிவை எடுக்க வைக்க முடிந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஆராய்வதற்கு அடிக்கடி பிரெசெல்சில் கூடுவது வழமை. இவ்வாறு கூடும்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நிபுணர்கள் உரிய விடயங்களை ஆராய்வார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளின் பிரதிநிதிகள் எல்.ரி.ரி.ஈ மீதான தடை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் எல்.ரி.ரி.ஈயை தொடர்ந்தும் தடைசெய்யும் பட்டியலில் உள்ளடக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்ட 20 அமைப்புக்களில் ஒன்றாக எல்.ரி.ரி.ஈ அமைப்பு காணப்படுகிறது. 2006ஆம் ஆண்டு இந்த அமைப்பு முதன் முதலில் தடைசெய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரை இந்த அமைப்பு தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்டு வருகிறது.
2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றத்தின் எல்.ரி.ரி.ஈ க்கு எதிரான தடை மீண்டும் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மேன்முறையீடு செய்தாலும் தடையைத் தொடர்ந்தும் பேணுவதற்கு இங்கு முடிவெடுக்கப்பட்டது. ஐரோப்பிய கவுன்சில் 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேன்முறை செய்திருந்தது.
எனினும் 2017ஆம் ஆண்டு மீண்டும் அந்தத் தடை உறுதிசெய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் எல்.ரி.ரி.ஈயின் பணத்தை முடக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் எல்.ரி.ரி.ஈயை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் பேணுவதற்கு இலங்கை, இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment